காவல் நிலையத்தைத் தாக்கியவர்; பஞ்சாப்பில் இணையச் சேவை நிறுத்தம்
சண்டிகர்: 'வாரிஸ் பஞ்சாப் டி' என்ற அமைப்பின் தலைவர் அம்ரித்பால் சிங் என்பவரைக் கைது செய்ய பஞ்சாப் மாநில காவல்துறை தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
காவல்துறையினர் வருவதை எப்படியோ அறிந்துகொண்ட அவர், தப்பியோடி தலைமறைவாகி உள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தை இந்தியாவிடம் இருந்து பிரித்து 'காலிஸ்தான்' என்ற பெயரில் தனி நாட்டை உருவாக்கும் நோக்குடன் செயல்பட்ட சில அமைப்புகள் கடந்த காலங்களில் முடக்கப்பட்டன. எனினும் சில வெளிநாடுகளில் உள்ள சீக்கியர்கள் சிலர் இதை நோக்கமாகக் கொண்டு செயல்படுகின்றனர்.
'வாரிஸ் பஞ்சாப் டி' அமைப்பும் இதே நோக்கத்துடன் செயல்பட்டு வருவதாகப் புகார் எழுந்துள்ளது. இதையடுத்து அந்த அமைப்பின் தலைவரான அம்ரித் பால் சிங்கை கைது செய்ய பஞ்சாப் காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அம்ரித்பாலின் ஆதரவாளர்கள் 78 பேர் கைதான நிலையில், வன்முறைச் சம்பவங்களைத் தடுக்கும் வகையில் அம்மாநிலத்தில் திங்கட்கிழமை வரை இணைய சேவை முடக்கப்பட்டது.
நடிகர் தீப் சித்து என்பவர் பஞ்சாப் மாநிலத்தில் 'வாரீஸ் பஞ்சாப் டே' என்ற அமைப்பு தொடங்கி நடத்தி வந்தார். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அவர் சாலை விபத்தொன்றில் உயிரிழந்துவிட்டார். அதன் பின்னர் அம்ரித்பால் அந்த அமைப்புக்குத் தலைமையேற்றார்.
கடந்த மாதம் 24ஆம் தேதி அம்ரித்பாலின் நெருங்கிய கூட்டாளியான லவ்பிரீத் சிங் என்பவரை சில குற்றச்சாட்டுகளின் பேரில் பஞ்சாப் காவல்துறை கைது செய்தது. இதுகுறித்து தகவல் அறிந்த அம்ரித்பால் உடனடியாக தனது ஆதரவாளர்களுடன் லவ்பிரீத் சிங் அடைத்து வைக்கப்பட்டுள்ள காவல் நிலையத்துக்குச் சென்றார்.
அப்போது காவல்துறைக்கும் அவரது தரப்புக்கும் இடையே நிகழ்ந்த மோதலின்போது ஆறு காவலர்கள் காயமடைந்தனர்.
அம்ரித்பாலும் அவரது ஆதரவாளர்களும் பயங்கர ஆயுதங்களைக் கையில் ஏந்தியிருந்தனர். காவல்துறையின் தடுப்பரண்களை உடைத்து நொறுக்கி முன்னேறிய அம்ரித்பாலிடம் அவரது கூட்டாளி விடுவிக்கப்படுவார் என உயரதிகாரிகள் உறுதிமொழி அளித்தனர்.
வன்முறைக்கு காவல்துறைதான் காரணம் என்றார் அம்ரித்பால். இதையடுத்து மாநில அரசு சட்டம் ஒழுங்கை காப்பாற்ற தவறிவிட்டதாக எதிர்க்கட்சிகள் சாடின. இந்நிலையில் அம்ரித்பாலை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பஞ்சாப் அரசு தீவிரப்படுத்தி உள்ளது. அவரது ஆதரவாளர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஏழு மாவட்டங்களைச் சேர்ந்த உயரதிகாரிகளைக் கொண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு மாநிலம் முழுவதும் அம்ரித்பால் தேடப்பட்டு வருகிறார்.
இந்நிலையில் ஜலந்தர் பகுதியில் அவர் பதுங்கி இருப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து காவல்துறையினர் அங்கு சென்றனர். ஆனால் அங்கிருந்து பாதுகாப்பு வாகனங்களுடன் அம்ரித்பால் தப்பிவிட்டது பின்னர் தெரியவந்தது. சுமார் 25 கிலோ மீட்டர் தூரத்துக்கு காவல்துறையினர் அவரைத் துரத்தியபோது, இறுதியாக இருசக்கர வாகனம் ஒன்றில் அவர் தப்பியதாகக் கூறப்படுகிறது.

