புதுடெல்லி: இந்திய, சீன உறவு சவாலான, அசாதாரண சூழலில் உள்ளது என மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
எல்லைப் பகுதிகளில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது என்றும் இது தொடர்பாக சீனாவின் புதிய வெளியுறவு அமைச்சரான கீன் காங்குடன் தாம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் டெல்லியில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் பேசும்போது அவர் குறிப்பிட்டார்.
"பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள், நடவடிக்கைகளுக்குப் பிறகும் எல்லையோர நிலைமை சீராகவில்லை. இந்திய ராணுவத்தின் கணிப்பின்படி, எல்லையில் சீன ராணுவத்தின் அச்சுறுத்தல் நீடிக்கிறது," என்றார் ஜெய்சங்கர்.
எல்லைப் பிரச்சினைக்குத் தீர்வு காண சீனா உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பதற்றத்தை தணிக்கும் நடவடிக்கைகளை அந்த நாடு முன்னெடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தினார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குழப்பத்தில் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், அதனால்தான் ராகுல் சீனாவைப் பாராட்டிப் பேசுவதாகக் கூறினார்.
"காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இந்தியப் பகுதிகள் சீனாவுக்குத் தாரைவார்க்கப்பட்டன. இப்போது அந்த கட்சி எல்லைப் பிரச்சினை குறித்து பொய்களைக் கூறி வருகிறது," என்றார் அமைச்சர் ஜெய்சங்கர்.

