பெங்களூர்: கர்நாடகா மாநிலத்தில் காங்கிரசை ஆட்சியில் அமர்த்தினால், அங்கு வேலை கிடைக்காமல் தவிக்கும் பட்டதாரிகளுக்கு, அவர்கள் வேலையில் சேரும்வரை அதிகபட்சம் இரண்டு ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ரூ.3,000 உதவித்தொகை வழங்கப்படும் என்று காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி (படம்) தெரிவித்துள்ளார்.
பெலகாவி நகரில் நடைபெற்ற இளையர் காங்கிரஸ் மாநாட்டில் ராகுல் காந்தி இதுபோன்ற பல்வேறு வாக்குறுதிகளை அளித்தார். மேலும், வேலை தேடும் பட்டயக் கல்வி படித்தவர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ரூ.1,500 வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
கர்நாடகாவில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் முன்கூட்டியே தேர்தல் பரப்புரையைத் தொடங்கி உள்ளனர். அவ்வகையில் ராகுல் காந்தியும் முழுவீச்சில் தேர்தல் பரப்புரையில் இறங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
தேசிய அளவில் அதிகம் ஊழல் புரியும் அரசாக கர்நாடக பாரதிய ஜனதா கட்சி அரசு இருப்பதாகவும் 40 விழுக்காடு கமிஷன் கேட்பதாக ஒப்பந்ததாரர்கள் சங்கம் புகார் கூறியதை ராகுல் காந்தி சுட்டிக்காட்டினார். காவல்துறை தேர்வு, துணை பேராசிரியர்கள் தேர்வு, துணை பொறியாளர் தேர்வு என அனைத்திலும் முறைகேடுகள் தலைவிரித்தாடுகின்றன.
மேலும் பேசிய ராகுல் காந்தி, "எத்தனையோ பேர் பிரதமர், பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ், காவல்துறை., ஆகியோரைப் பார்த்து பயப்படலாம். ஆனால், எனக்கு சிறிதளவும் அச்சமில்லை. நான் எவ்வளவு தாக்கப்பட்டாலும், என் வீட்டுக்கு எத்தனை முறை காவல்துறை படையை அனுப்பினாலும் எனக்கு அச்சமில்லை. என்னை யாராலும் அச்சுறுத்த முடியாது. நான் எப்போதும் உண்மையின் பக்கம்தான் நிற்பேன்," என்று கூறியுள்ளார்.

