புதுடெல்லி: டெல்லி அரசின் மதுபானக் கொள்கை முறைகேட்டில் தெலுங்கானா முதல்வரின் மகளும் எம்எல்சியுமான கவிதாவுக்கு (படம்) தொடர்புள்ளதாக கூறி அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகின்றது. இது தொடர்பாக கடந்த 11ஆம் தேதி கவிதாவிடம் டெல்லி அமலாக்கத்துறை கிட்டத்தட்ட ஒன்பது மணி நேரம் விசாரணை நடத்தியது. இந்நிலையில், நேற்று முன்தினம் (மார்ச் 20) மீண்டும் கவிதாவிடம் விசாரணை மேற்கொண்டது.
அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரிடம் மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பாக ஏறக்குறைய 10 மணி நேரம் விசாரணை நடத்தி கவிதாவின் வாக்குமூலத்தைப் பெற்றனர்.
டெல்லி அரசு, கடந்த 2021-22ஆம் ஆண்டில் புதிய மதுபான கொள்கையை அறிமுகம் செய்தது. இதில் ஆம் ஆத்மி கட்சியினர் ரூ.100 கோடி வரை லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சிபிஐ, அமலாக்கத் துறை தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றன.
இந்த வழக்கில் தெலுங்கானா முதல்வரும் பிஆர்எஸ் கட்சித் தலைவருமான கே.சந்திரசேகர் ராவ் மகள் கவிதா மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கவிதாவிடம் சிபிஐ அதிகாரிகள் ஏற்கெனவே விசாரணை நடத்தினர். கடந்த 11ஆம் தேதி அமலாக்கத் துறை அதிகாரிகள் கவிதாவிடம் சுமார் 9 மணி நேரம் விசாரணை நடத்தினர். 16ஆம் தேதி மீண்டும் ஆஜராகுமாறு உத்தரவிட்டனர்.
ஆனால் இந்த வழக்கில் கைது செய்யத் தடை விதிக்க கோரியும் சம்மனை ரத்து செய்யக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நிலுவையில் இருப்பதால், விசாரணைக்கு முன்னிலையாவதில் இருந்து விலக்கு அளிக்க கவிதா கோரிக்கை வைத்திருந்தார். அதை நிராகரித்த அமலாக்கத் துறை, 20ஆம் தேதி முன்னிலையாக உத்தரவிட்டது.
இதன்படி நேற்று முன்தினம் டெல்லி அமலாக்கத் துறை அலுவலகத்தில் கவிதா முன்னிலையானார். அப்போது, கவிதாவின் பினாமி என்று கருதப்படும் ஏற்கெனவே கைதான அருண் ராமச்சந்திரனிடம் நடத்திய விசாரணையில் தெரிய வந்த தகவல்கள் தொடர்பாக கவிதாவிடம் கேள்விகள் கேட்கப்பட்டதாகத் தெரிகிறது.

