புதுடெல்லி: கர்நாடக கைவினைக் கலைஞர்களால் உருவாக்கப்பட்ட சந்தன மரத்தாலான புத்தர் சிலையை ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி பரிசளித்தார்.
இந்தியா வந்துள்ள பிரதமர் கிஷிடாவுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கர்நாடக மாநிலத்தில் தயாரிக்கப்பட்ட சந்தன மர நுண் சிற்பத்தை பரிசாக வழங்கினார். சிலையின் முன்புறத்தில் தியானத்தில் இருக்கும் புத்தர் சிலையும் சிலையின் பின்புறத்தில் போதி மரமும் செதுக்கப்பட்டுள்ளது.
சந்தன மரத்தில் மிகவும் நுண்ணிய வேலைப்பாடுகளுடன் கர்நாடக கைவினைக் கலைஞர்களால் இது உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த அழகிய சிலை, கர்நாடகா மாநிலத்தில் தயாராகும் புகழ்பெற்ற 'கடம்வூடி ஜாலி' பெட்டியில் வைக்கப்பட்டு பிரதமர் ஃபுமியோ கிஷிடாவுக்கு பரிசளிக்கப்பட்டது.

