ஷில்லாங்: மேகாலய மாநில சட்டப்பேரவையில் இந்தியில் பேசிய ஆளுநரைக் கண்டித்து எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் நான்கு பேர் வெளிநடப்பு செய்தனர்.
அம்மாநிலத்தில் ஆங்கிலம் அலுவல் மொழியாக உள்ள நிலையில், நிதிநிலை அறிக்கைக்கான சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் முதல் நாளன்று ஆளுநர் இந்தியில் உரையாற்றினார். இதைக் கண்டித்து மக்களின் குரல் கட்சியைச் சேர்ந்த நான்கு எம்எல்ஏக்கள் முழக்கங்களை எழுப்பினர்.
"மேகாலயா இந்தி பேசும் மாநிலம் அல்ல. அசாம் மொழி எங்கள் மீது திணிக்கப்பட்ட போது மொழி அடிப்படையில் பிரிந்த மாநிலம்தான் மேகாலயா. எனவே எங்களுக்கு புரியும் மொழியில் ஆளுநர் பேச வேண்டும்," என்று நான்கு எம்எல்ஏக்களும் தெரிவித்தனர்.
இதுகுறித்து விளக்கம் அளித்த மாநில முதல்வர் கன்ராட் சங்மா, ஆளுநரால் ஆங்கிலத்தில் தனது உரையைப் படிக்க இயலாது என்றும் இதன் காரணமாக அவரது உரை இந்தியில் அச்சடித்து வழங்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

