ஸ்ரீஹரிகோட்டா: இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து 36 தொலைதொடர்பு செயற்கைகோள்களுடன் எல்.வி.எம்.3-எம்.3 என்ற உந்துகணையை வெற்றிகரமாக விண்ணில் பாய்ச்சியது.
அதிக எடையைச் சுமந்துசெல்லும் விதமாக வடிவமைக்கப்பட்ட அந்த உந்துகணை, மொத்தம் 5.6 டன் எடையுள்ள செயற்கைகோள்களைச் சுமந்து சென்றது.
இங்கிலாந்தின் 'ஒன்வெப்' நிறுவனத்துக்குச் சொந்தமான செயற்கைக்கோள்கள் விண்ணுக்குக் கொண்டு செல்லப்பட்டன. இஸ்ரோ பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி வகை உந்துகணைகள் மூலம் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது.
வணிக நோக்கில் செயற்கைக்கோள்களை ஜிஎஸ்எல்வி மார்க்-3 (எல்விஎம்-3) உந்துகணை மூலம் விண்ணில் செலுத்தும் முயற்சியை இஸ்ரோ மேற்கொண்டு வருகிறது.
இதன்படி, முதல்கட்டமாக, ஜிஎஸ்எல்வி மார்க்-3 உந்துகணை மூலம் 36 செயற்கைக் கோள்கள் கடந்த ஆண்டு அக்டோபர் 23ஆம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டன.
உடன்பாட்டின்படி எஞ்சிய 36 துணைக்கோள்களும் நேற்றுக் காலை 9 மணிக்கு விண்ணுக்கு வெற்றிகரமாக அனுப்பப்பட்டுவிட்டதாக நேற்று இஸ்ரோ அமைப்பு தெரிவித்தது.

