புதுடெல்லி: இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங்கை காவல்துறை தீவிரமாக தேடி வருகிறது.
அவரின் ஆதரவாளர்கள் உள்ளிட்ட சுமார் 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரிட்டன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் அந்தந்த நாடுகளில் உள்ள இந்தியத் தூதரங்களுக்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள்.
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் இந்திய தூதரகம் முன் சனிக்கிழமை போராட்டம் நடத்திய காலிஸ்தானியர்கள், இந்தியத் தூதர், தூதரக பணியாளருக்கு மிரட்டல் விடுத்ததுடன், வாஷிங்டனைச் சேர்ந்த லலித் ஜா என்ற இந்த இந்தியச் செய்தியாளரைத் தாக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், பிரிட்டன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடாவில் ஆர்ப்பாட்டம் நடத்திவரும் காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு எதிராக இந்திய அரசு முழுமூச்சில் சட்டத்தை அமலாக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
சீக்கிய போராட்டவாதிகளைப் பொறுத்தவரை பிரிட்டன், கனடா அரசுகள் கடுமையான அணுகு முறையைக் கடைப்பிடிக்கவில்லை என்று இந்திய அரசு கருதுகிறது.
காலிஸ்தான் ஆதரவு போராட்டங்கள் காரணமாக ஏற்படக்கூடிய விளைவுகளுக்கு பிரிட்டன், கனடா அரசுகளே பொறுப்பு ஏற்க வேண்டிய நிலை வரும் என்றும் இந்தியா எச்சரித்துள்ளது.
லண்டன், சான் பிரான்சிஸ்கோ நகர்களில் உள்ள இந்தியத் தூதரகங்களுக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்து இருக்கிறார்கள் என்பதைச் சுட்டிய இந்தியாவின் டெல்லி சிறப்பு காவல் பிரிவு அவர்களுக்கு எதிராக புகார் பதிந்தது. இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை தனி நாடாக பிரித்து காலிஸ்தான் என்ற பெயரில் தனி நாட்டை உருவாக்கும் முயற்சியில் வெளிநாடுவாழ் பஞ்சாபியர்களில் சிலர் முயன்று வருகின்றனர்.
இந்தியாவில் அவர்களுக்கு ஆதரவாக அம்ரித்பால் சிங் செயல்பட்டு வருகிறார். பஞ்சாப்பில் காலிஸ்தான் தனி நாடு என்ற கோஷத்துடன் செயல்படும் 'பஞ்சாப் தி வாரிஸ்' அமைப்பின் தலைவர் அம்ரித்பால் சிங்.
சீக்கிய மத போதகரான அவர் மீது இருந்த வழக்குகள் தொடர்பாக அவரைக் கைது செய்ய காவல்துறை முயன்றபோது அவர் தப்பி ஓடிவிட்டார். அம்ரித்பால் சிங்குடன் தொடர்பு வைத்திருந்த தம்பதி இருவர் கைதாயினர்.
அம்ரித்பால் சிங்கை கைது செய்வதில் பஞ்சாப் அரசு தீவிரமாக உள்ளது. இந்தச் சூழலில் சீக்கியர்கள் சிலரின் கோரிக்கையான காலிஸ்தான் இப்போது மீண்டும் வலுப்பெறத் தொடங்கிஉள்ளது.

