லக்னோ: நரபலி கொடுத்தால் இரண்டரை வயது குழந்தையின் மனநலப் பிரச்சினைகள் தீர்ந்து விடும் என நினைத்த தந்தை ஒருவர், மந்திரவாதியின் அறிவுரைப்படி 10 வயது சிறுவனைக் கடத்தி, நரபலி கொடுத்துள்ள சம்பவம் உத்தரப்பிரதேச மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம், பக்ரைச் மாவட்டத்தில் உள்ள பர்சா கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ண வர்மா. இவரது மகன் விவேக், 10. கடந்த 23ஆம் தேதிமுதல் சிறுவன் விவேக் திடீரென காணாமல் போனதால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், காவல்நிலையத்தில் புகார் செய்தனர்.
சிறுவனைக் காவலர்கள் தேடிவந்த நிலையில், அவன் அங்குள்ள ஒரு வயல்வெளியில் இருந்து பிணமாக மீட்கப்பட்டான்.
நரபலிக்காக விவேக் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
கொல்லப்பட்ட விவேக்கின் உறவினரான அனூப் என்பவர் அதே பகுதியில் வசித்து வருகிறார். இவரது இரண்டரை வயது ஆண் குழந்தை மனநலம் குன்றிய நிலையில், உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது.
பல இடங்களில் சிகிச்சை அளித்தும் குழந்தையின் உடல்நிலை தேறாததால், அனூப் ஒரு மந்திரவாதியை அணுகியுள்ளார்.
அந்த மந்திரவாதி நரபலி கொடுத்தால் குழந்தையின் உடல்நலம் தேறும் எனக் கூறியதை அடுத்து, அனூப் தனது உறவினரான சிந்தாராம் உதவியுடன் சிறுவன் விவேக்கை கடத்தி, தாக்கி கொலை செய்தது காவலர்களின் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, அனூப், அவரது உறவினர் சிந்தாராம், மந்திரவாதி ஆகிய மூவரையும் காவலர்கள் கைது செய்தனர்.

