பெங்களூரு: கர்நாடக சட்டமன்றத் தேர்தல் வரும் மே 10ஆம் தேதி நடக்கும் என்று தலைமை தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது.
கர்நாடக சட்டமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. 224 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட கர்நாடகாவில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.
நடப்பு கர்நாடக அரசின் பதவிக்காலம் மே 24ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் ஏப்ரல் 13ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 20ஆம் தேதி வரை நடக்கும்.
வேட்புமனு பரிசீலனை ஏப்ரல் 21ஆம் தேதி, வேட்புமனுவைத் திரும்பப் பெற ஏப்ரல் 2ஆம் தேதி கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 13ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்னதாகவே கர்நாடக அரசியல் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. ஆளும் பாஜக, ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ளவும் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கவும் முயல்கின்றன.
ஜனதா தளம்(எஸ்) கட்சியும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், மாண்டியா மாவட்டம் பேவினஹள்ளி பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு திறந்த வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்த காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், அங்கு திரண்டிருந்த மக்களை நோக்கி ரூ.500 பணத்தை வீசி எறிந்ததாகவும் அவற்றை மக்கள் போட்டி போட்டு எடுத்துச் சென்றதாகவும் தகவல்கள் கூறின.
அந்தச் சம்பவத்தைக் காட்டும் காணொளி பெரும் பரபரப்பைக் கிளப்பி உள்ளது.

