புதுடெல்லி: வெறுப்பு எனும் தீய வளையத்தில் இந்திய தேசம் சிக்கிக் கொண்டுள்ளதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அரசியலில் இருந்து மதத்தை வெளியேற்றுவது மட்டுமே இதற்குத் தீர்வாக அமையும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர்.
நாடு முழுவதும் வெறுப்பு பேச்சு தொடர்பாக பல்வேறு வழக்குகள் பதிவாகி வருகின்றன. இத்தகைய வழக்கு ஒன்றை விசாரித்தபோதே உச்ச நீதிமன்றம் தனது கருத்தை தெரிவித்தது.
விசாரணையின்போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் சிலர் பேசி வருவதாகக் குறிப்பிட்ட மத்திய அரசு வழக்கறிஞர் கேரளாவிலும் தமிழகத்திலும் அண்மையில் வெறுப்புணர்வைத் தூண்டும் பேச்சு தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினைகள் குறித்து விவரித்தார்.
இதுபோன்ற சம்பவங்கள் குறித்து தாங்களும் அறிந்துள்ளதாகக் குறிப்பிட்ட நீதிபதிகள், அரசியலில் இருந்து மதம் அப்புறப்படுத்தப்படும் அந்தத் தருணம் வெறுப்புப் பேச்சுகள் எல்லாம் தடைபடும் என்றனர்.
"நிச்சயமாக வெறுப்புப் பேச்சுகளுக்கும் மதம் மற்றும் அரசியலுக்கும் தொடர்பு இருக்கிறது. அரசியல்வாதிகள் மதத்தை பயன்படுத்திக் கொள்கின்றனர்.
"சகோதரத்துவம் என்ற நன்மதிப்பில் வெறுப்புப் பேச்சுக்கள் விரிசல்களை ஏற்படுத்தியுள்ளன. இந்த வெறுப்புப் பேச்சுக்களை மதம் சார்ந்த சில அமைப்புகள் உருவாக்குகின்றன," என்று நீதிபதி பி.வி.நாகரத்னம் குறிப்பிட்டார். முன்னாள் பிரதமர்கள் வாஜ்பாய், நேரு போன்றவர்கள் பேசும்போது கிராமப்புற மக்கள் செவிமடுத்ததாகக் குறிப்பிட்ட நீதிபதிகள், தற்போது எவ்வித ஞானமும் இல்லாத சிறிய அமைப்புகள் எல்லாம் வெறுப்புப் பேச்சுக்களை கட்டவிழ்த்துவிடுவதாகச் சாடினர்.
"பேச்சு சுதந்திரத்திற்கு ஏதும் கட்டுப்பாடு இல்லையா? மதிநுட்பம் இல்லாவிட்டால் இந்த தேசத்தை உலகின் முதல் நிலை நாடாக உருவாக்க இயலாது. சகிப்பின்மை, அறிவின்மை, கல்வியின்மையால் மதிமயக்கம் ஏற்படும். இதை அகற்றுவதில் நாம் முதன்மை கவனம் செலுத்த வேண்டும்," என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.

