புதுடெல்லி: நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அனைத்து மாநிலங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 3,016 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதியானது. நாடு முழுவதும் இப்பாதிப்புக்காக சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 13,509ஆக அதிகரித்துள்ளது என்றும் அன்றாடத் தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அன்றாட தொற்று பாதிப்பு 2.7 விழுக்காடாகவும் வாராந்திர பாதிப்பு விகிதம் 1.71% ஆகவும் உள்ளது.
தொற்று ஏற்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4.41 கோடியாக உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,396 பேர் குணமடைந்துள்ளனர்.
புதன்கிழமை மட்டும் 14 பேர் தொற்று பாதிப்பால் உயிரிழந்துவிட்டனர். அதிகபட்சமாக கேரளாவில் எட்டு பேரும் பலியான நிலையில், மகாராஷ்டிராவில் மூவர், டெல்லியில் இருவர், இமாச்சலப் பிரதேசத்தில் ஒருவர் பலியாகிவிட்டதாக மத்திய சுகாதார அமைச்சு கூறியது.
கடந்த ஜனவரி 16ஆம் தேதி நாட்டில் தொற்று பாதிப்பே இல்லை என்று இருந்த நிலையில் கடந்த புதன்கிழமை மட்டும் தலைநகர் டெல்லியில் 300 பேருக்கு கொரோனா கிருமி தொற்றியுள்ளது.

