இந்தூர்: மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் கோவிலின் கிணறு மூடி இடிந்து விழுந்ததால் மாண்ட 36 பேரில் எட்டுப் பேரின் உடற்பாகங்களைத் தானமாக வழங்க அவர்களின் குடும்பத்தினர் முன்வந்துள்ளனர்.
தங்கள் அன்புக்குரியோரின் தோலையும் கண்களையும் தானமாக வழங்க அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை ராம நவமி கொண்டாட்டத்தின்போது பாலேஷ்வர் மகாதாவ் கோவிலில் அத்துயர சம்பவம் தொடர்பில் குற்றவியல் நடுவர் விசாரணை நடத்த மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் உத்தரவிட்டுள்ளார்.
விபத்து நிகழ்ந்த கோவிலுக்கு நேற்று நேரில் சென்று பார்வையிட்ட அவர், பின்னர் காயமடைந்தோர் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்குச் சென்று, அவர்களுக்கு ஆறுதல் கூறினார். அப்போது, கோவிலுக்கு அருகே நின்றிருந்த சிலர், 'முதல்வர் ஒழிக' என்று முழக்கமிட்டனர்.
ராணுவ வீரர்கள் 75 பேர் உட்பட மொத்தம் 140 பேர் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இதனிடையே, கோவில் நிர்வாகக் குழுத் தலைவர்மீதும் செயலாளர்மீதும் இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 304ன்கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.


