புதுடெல்லி: எம்.பி. பதவியை இழந்த பிறகு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி முதல்முறையாக கர்நாடகாவில் நடக்கும் பேரணியில் பங்கேற்கிறார்.
"ஏப்ரல் 9ஆம் தேதி கோலாரில் ராகுல் காந்தி 'ஜெய் பாரத்' பேரணி மேற்கொள்கிறார். ஏப்ரல் 11ஆம் தேதி ராகுல் காந்தி வயநாட்டில் பிரசாரம் செய்கிறார். மக்களின் குரலான அவரை ஒரு போதும் மௌனமடையச் செய்ய முடியாது. அவரது குரல் இன்னமும் சத்தமாக, வலிமையாக ஒலிக்கும்," என்று டுவிட்டர் பதிவில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால் தெரிவித்தார்.
கர்நாடக சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக மே 10ஆம் தேதி வாக்குப்பதிவும் மே 13ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதற்கிடையே ராகுல் காந்திக்கு எதிரான வழக்கில் விரைவில் மேல்முறையீடு செய்யப்படும் என்று காங்கிரஸ் மேலிடம் தெரிவித்து உள்ளது. ராகுல் காந்திக்கு எதிராக தொடுக்கப்பட்ட அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் அண்மையில் அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. இதையடுத்து எம்.பி. பதவியிலிருந்து அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். நாடே அதிர்ச்சி அடைந்த இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி குறித்த மற்றொரு அவதூறு வழக்கில் நீதிமன்றத்தில் முன்னிலையாகும்படி ராகுலுக்கு பாட்னா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

