ரூ.500 நோட்டுகளை வீசிய காங்கிரஸ் தலைவர் மீது வழக்கு
பெங்களூரு: கர்நாடகாவில் தேர்தல் பேரணியின்போது மக்களிடையே 500 ரூபாய் நோட்டை காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் வீசும் காணொளிக் காட்சி அண்மை யில் சமூக ஊடகங்களில் பரவியது. இதையடுத்து, மாண்டியா நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, மாண்டியா காவலர்கள் டி.கே. சிவக்குமார் மீது வழக்குப் பதிந்துள்ளனர்.
விழிப்புடன் இருக்க அறிவுறுத்து
புனே: நாட்டில் தற்போதைய கொரோனா பரவலுக்கு எக்ஸ்.பி.பி. 1.16 திரிபுதான் காரணம் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தொற்று பாதித்தவர்களை மருத்துவமனையில் சேர்க்கவேண்டியது இல்லை என்பதால் அபாயம் குறைவாகவே உள்ளது. என்றாலும் மக்கள் விழிப்புடன் இருக்கவேண்டும் என மத்திய சுகாதார அமைச்சு எச்சரித்து உள்ளது.
இதனிடையே, மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், அரசு அலுவலகங்கள், கல்லூரி கள், வங்கிகளில் பணிபுரியும் ஊழியர்கள், அதிகாரிகள் முகமூடி அணிவதைக் கட்டாயமாக்கி உத்தரவிட்டுள் ளார் சதாரா மாவட்ட ஆட்சியர் ருசேஷ் ஜெய்வன்ஷி.
இந்தியா வந்தார் பூட்டான் மன்னர்
புதுடெல்லி: மூன்று நாள் அரசு முறைப் பயணமாக இந்தியாவுக்கு வந்துள்ள பூட்டான் மன்னர் ஜிக்மி கெய்சர் நெம்கியால் வாங்சுங்கை மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்துப் பேசினார். ஜெய்சங்கர் தனது டுவிட்டர் பதிவில், பூட்டான் நாட்டின் எதிர்காலத்திற்கான திட்டங்கள், இந்தியாவுடனான இருதரப்பு பங்களிப்பை வலுப்படுத்துவது குறித்து பேசியதாக குறிப்பிட்டிருந்தார். பிரதமர் மோடியுடனான சந்திப்பில் இருதரப்பு உறவுகள், இந்தியா உதவியுடன் பூட்டானில் நடக்கும் வளர்ச்சிப் பணிகள் குறித்து பூட்டான் மன்னர் ஆலோசிக்கலாம் எனக் கூறப்படுகிறது.
பயணிக்குத் தீ வைத்தவர் கைது
கோழிக்கோடு: கேரள மாநிலம், ஆலப்புழாவில் இருந்து கண்ணூரை நோக்கி சென்றுகொண்டிருந்த விரைவு ரயிலில் பயணம் செய்த பயணிமீது ஆடவர் ஒருவர் தீ வைத்ததால் மூவர் உயிரிழந்தனர். குற்றவாளியைக் காவலர்கள் தேடி வந்த நிலையில், நேற்று உத்தரப்பிரதேசத்தில் அவர் கைது செய்யப்பட்டார்.

