புதுடெல்லி: உக்ரேன் வெளியுறவு துணை அமைச்சர் எமின் தபரோவா நான்கு நாள் அதிகாரபூர்வ பயணமாக புதுடெல்லி வந்தடைந்தார்.
இது குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், உக்ரேனுக்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டை இந்தியா மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
"முனிவர்கள், மகான்கள், குருமார்கள் எனப் பலரைப் பெற்றெடுத்த பூமியான இந்தியாவுக்கு வருகை தந்ததில் மகிழ்ச்சி. இன்றைய தினம், விஷ்வகுருவாக, உலகளாவிய ஆசிரியராகவும் நடுவராகவும் இருக்க இந்தியா விரும்புகிறது. உக்ரேன் விவகாரத்தில், இந்தியாவின் ஆதரவு தேவை," என்று எமின் தபரோவா குறிப்பிட்டுள்ளார்.
ஜி20 அமைப்புக்கு இந்தியா தலைமையேற்றுள்ளதால், ஜி20 மாநாட்டில் பங்கேற்க உக்ரேன் அதிபருக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என அமைச்சர் எமின் தபரோவா வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், உக்ரேனுக்கு வரும்படி பிரதமர் மோடிக்கு அவர் அழைப்பு விடுப்பார் என்றும் உக்ரேனுக்கு மனிதாபிமான உதவிகளை கூடுதலாக வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

