புதுடெல்லி: புதுடெல்லியில் உள்ள அமலாக்க துறை தலைமையகத்தில் பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் வேலைக்காக நிலம் பெற்ற ஊழல் வழக்கின் விசாரணைக்கு நேரில் முன்னிலையானார்.
புதுடெல்லி, ராஷ்டிரிய ஜனதா தள கட்சித் தலைவரும் பீகார் மாநில முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ் கடந்த 2004-2009 காலகட்டத்தில் அப்போது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் ரயில்வே அமைச்சராக இருந்தபோது, ரயில்வேயில் பலருக்கு வேலைவாய்ப்பு வழங்கினார்.
இதற்காக, அவர்களிடமிருந்து அதற்கு கைமாறாக, லாலு பிரசாத் குடும்பத்தினர் தள்ளுபடி விலையில் நிலங்களைப் பெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
பீகார் தலைநகர் பாட்னாவை சேர்ந்த பலர், பல்வேறு ரயில்வே கோட்டங்களில் டி பிரிவு பணியிடங்களில் நியமிக்கப்பட்டனர். அதற்குப் பதிலாக, அவர்களது நிலங்கள், லாலு குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஏ.கே. இன்போசிஸ்டம் என்ற நிறுவனத்தின் பெயர்களுக்கு மாற்றப்பட்டன.
பின்னர் அதனை லாலு குடும்ப உறுப்பினர்கள் கையகப்படுத்தினர்.
இதன்படி, பாட்னாவில் 1 லட்சத்து 5 ஆயிரத்து 292 சதுர அடி நிலங்கள், 5 கிரய பத்திரம், இரண்டு தான பத்திரங்கள் மூலம் லாலு குடும்ப உறுப்பினர்களின் பெயர்களுக்கு மாற்றப்பட்டன.
அதற்கான பணம், ரொக்கமாக தரப்பட்டதாக ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலங்களின் அப்போதைய வழிகாட்டி மதிப்பு ரூ.4 கோடியே 39 லட்சம். ஆனால், சந்தை மதிப்பு அதைவிடப் பல மடங்கு அதிகமாக இருந்தது.
ரயில்வேயின் பணி நியமன விதிமுறைகள் பின்பற்றப்படாததுடன் அந்த நபர்களுக்குப் பணி நிரந்தரமும் செய்யப்பட்டது. இதுதொடர்பாக லாலு பிரசாத் யாதவ், அவருடைய மனைவியும், முன்னாள் முதல்வருமான ராப்ரி தேவி, இளைய மகனும் தற்போதைய துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ், மகள் மிசா பாரதி உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

