பெங்களூரு: தென் மாநிலங்களிலேயே கர்நாடகாவில் மட்டும்தான் பாஜக ஆட்சி உள்ளது. அதனால் அங்கு ஆட்சியைத் தக்கவைப்பது பாஜகவுக்கு மிகவும் முக்கியம்.
காங்கிரஸ் கட்சி ஏற்கெனவே 166 வேட்பாளர்கள் கொண்ட பட்டியலை வெளியிட்டுவிட்டது. ஐக்கிய ஜனதா தளக் கட்சியும் தனது முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு அடுத்த கட்டப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
இப்போதைய சூழலில், வெற்றிவாய்ப்பு தேர்தல் காங்கிரசுக்கு சாதகமாக இருப்பதாகக் சில கருத்துக்கணிப்பு கூறுவதால் பாஜக முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பார்த்துப் பார்த்து தேர்வு செய்து 189 வேட்பாளர்களின் பெயரை வெளியிட்டுள்ளது.
பலமுறை எம்எல்ஏவாக இருந்தவர்களுக்கு இந்தமுறை போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. சர்ச்சையில் சிக்கியவர்கள் மற்றும் கட்சிக்கு எதிராகச் செயல்படுபவர்கள் உள்ளிட்டோருக்கு பாஜக வாய்ப்பு வழங்கவில்லை. அந்த வகையில் மீன்வளத்துறை அமைச்சர் அங்காரா மற்றும் 10 எம்எல்ஏக்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்கப்படவில்லை. மேலும் பல தொகுதிகளில் மூத்த தலைவர்களுக்கு போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டு 52 புதுமுகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளனர்.
அதனால் அதிருப்தி அடைந்த தலைவர்கள் தங்களது ஆதரவாளர்களுடன் கட்சிக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா முன்னாள் முதலமைச்சர் ஜெகதீஷ் ஷட்டரின் ஆதரவாளர்களும் பாஜக தலைமையை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெலகாவில் வடக்குத் தொகுதி எம்எல்ஏ அணில் பேனேகே, ராம் துப் எம்எல்ஏ மகாதேவபா ஆகியோரின் வீடுகளுக்கு முன்பு கூடிய பாஜக தொண்டர்கள் அவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.