புதுடெல்லி: மனநோய் சிகிச்சைக்கு மருத்துவ செலவு ஆவதால் இந்தியக் குடும்பங்கள் சில வறுமையில் தள்ளப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் நடத்திய ஆக அண்மைய ஆய்வு ஒன்றில் தெரிய வந்து உள்ளது.
மனநிலை பாதிக்கப்பட்டோரைக் கொண்ட குடும்பங்களில் 20 விழுக்காடு அவ்வாறு ஏழ்மைக்கு நிலைக்குச் சென்றுவிட்டதாக ஆய்வு தெரிவிக்கிறது.
2018 டிசம்பர் மாதம் 1.18 லட்சம் குடும்பங்களிடம் நடத்தப்பட்ட என்எஸ்எஸ் எனப்படும் தேசிய மாதிரி ஆய்வின் அடிப்படையில் புதிய ஆய்வு நடத்தப்பட்டது. மனநிலை பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் 6,679 பேரும் ஆய்வில் உட்படுத்தப்பட்டனர்.
இதுபோன்ற ஆய்வு இந்தியாவில் நடத்தப்பட்டு இருப்பது இதுவே முதல்முறை. மனநிலை பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிப்பதற்கான மருத்துவச் செலவு பன்மடங்கு அதிகரித்துவிட்டதும் ஆய்வில் தெரிய வந்தது.
அதனால், குடும்ப சுகாதாரப் பராமரிப்புக்கான மொத்த செலவில் மனநோய் சிகிச்சைக்கு ஆகும் செலவு மட்டும் 18.1 விழுக்காடாக அதிகரித்து விட்டதாக ஆய்வு கண்டறிந்தது.

