மத்திய, மாநில அரசாங்கங்களின் 12,000 இணையத்தளங்கள் ஊடுருவப்படலாம்
புதுடெல்லி: இந்திய உள்துறை அமைச்சின் இணையக் குற்றங்கள் தொடர்பான ஒத்துழைப்பு நிலையம், மத்திய, மாநில அரசாங்கங்களின் 12,000 இணையத்தளங்கள் ஊடுருவப்படலாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன் தொடர்பில் அரசாங்க அமைப்புகளுக்கு நிலையம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
'ஹேக்டிவிஸ்ட் இந்தோனீசியா' எனும் குழு அந்த இணையத்தளங்களின் பட்டியலை வெளியிட்டு இன்னும் சில நாள்களில் அவற்றின்மீது இணையத் தாக்குதல் நடத்தப்போவதாக கூறியிருப்பதாக நிலையம் குறிப்பிட்டது.
இருப்பினும் இந்திய அரசாங்க இணையத்தளங்கள் இத்தகைய மிரட்டல்களைச் சமாளிக்கும் திறன் பெற்றிருப்பதாக அது கூறியது.
'ஹேக்டிவிஸ்ட் இந்தோனீசியா' குழு, இந்தியாவிலும் சில வெளிநாடுகளிலும் இத்தகைய இணையத் தாக்குதலுக்குத் திட்டமிடுவதாக புலனாய்வுத் தகவல்கள் கிடைக்கப் பெற்றதாக இணையக் குற்றங்கள் தொடர்பான ஒத்துழைப்பு நிலையம் சொன்னது.
மத்திய மின்னணுவியல், தகவல் தொழில்நுட்ப அமைச்சிற்கு முதலில் இந்தத் தகவல் கிடைத்ததாகக் கூறப்பட்டது.
பெயரில் குறிப்பிடப்பட்டிருப்பதுபோல அந்த ஊடுருவல் குழு இந்தோனீசியாவைச் சேர்ந்ததாக இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை என்பதையும் சீனா, உக்ரேன் போன்ற நாடுகளும் அதன் இலக்குகளில் அடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இத்தகைய ஊடுருவல் குழுக்கள் அரசாங்க இணையத்தளங்களை ஊடுருவி அவை செயல்படும் வேகத்தைக் குறைக்க முயலும்.
சென்ற ஆண்டுகூட குஜராத் மாநிலத்தில் சில இணையத்தளங்களை ஊடுருவ சிலர் முயன்றதாகக் கூறப்பட்டது.
அமைப்புகளோ தனிமனிதர்களோ இணையத் தாக்குதலால் பாதிக்கப்பட்டால் அதுகுறித்து 'சைபர்கிரைம்.கவ்.இன்' எனும் இணையத்தளத்தின் வாயிலாக அரசாங்கத்திடம் தகவல் தெரிவிக்கும்படி ஆலோசனை கூறப்பட்டிருக்கிறது.
இணையப் பாதுகாப்பு, இணைய ஊடுருவல் போன்ற அம்சங்கள் தொடர்பான விழிப்புணர்வு குறித்து மத்திய, மாநில அரசாங்க அமைப்புகளுக்குத் தகவல் அளிக்கப்பட்டிருப்பதாகவும் இதன் தொடர்பிலான நடவடிக்கைகளுக்கு அரசாங்கத்தின் வழிகாட்டிக் குறிப்புகள் உதவும் என்றும் உள்துறை அமைச்சு கூறியது.

