லக்னோ: உத்தரப் பிரதேச மாநில அரசாங்கம், போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பில் சிறப்புக் காவல்படைப் பிரிவை அமைத்துள்ளது.
காவல்துறை அதிகாரிகள் 450 பேர் அந்தச் சிறப்புப் பிரிவில் பணியில் ஈடுபடுத்தப்படுவர்.
பல்வேறு பதவிகளில் அவர்கள் பணியமர்த்தப்படுவர். அனுபவம், செயல்திறன் ஆகிய தகுதிகளின் அடிப்படையில் அவர்களின் நியமனம் தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்பட்டது.
களப்பணியில் ஈடுபட வேண்டிய ஒவ்வொரு பதவிக்குமான வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இருப்பினும் அலுவலகத்தில் வேலை செய்ய நேரிடும் கணக்காளர்கள், கணினிப் பணியாளர்கள் போன்ற பதவிகளுக்கு வயது வரம்பு இல்லை.
காவல்துறை அதிகாரிகள் வழக்கமாக மூன்று ஆண்டுகளுக்கு இந்தப் பிரிவில் பணியமர்த்தப்படுவர்.
தேவையேற்பட்டால் அவர்களது பணிக்காலம் அதிகபட்சம் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படக்கூடும்.
இவ்வாறு இரு முறை பணிக்காலம் நீட்டிக்கப்படலாம்.
சிறப்புத் தகுதியுடைய அதிகாரிகள், குறுகிய காலத்திற்கும் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவில் பணியமர்த்தப்படுவர்.
இந்தப் பிரிவில் நியமிக்கப்படும் அதிகாரிகள்மீது ஏற்கெனவே குற்றவியல் வழக்குகள் அல்லது துறை சார்ந்த ஒழுங்கு நடவடிக்கைகளை எதிர்கொண்டிருக்கக்கூடாது.
கடந்த மூன்று ஆண்டுகளில் போதைப்பொருள், மதுபானங்கள், ஆயுதங்கள் போன்றவற்றைப் பறிமுதல் செய்த சம்பவங்களில் குறிப்பிடத்தகுந்த பணி ஆற்றிய அதிகாரிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

