புதுடெல்லி: இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கிழக்கு ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக்கிற்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
தமது பயணத்தின் ஓர் அங்கமாக அமைச்சர் ஜெய்சங்கர் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ரயிலில் அங்கு பயணம் செய்தார்.
அவருடன் மொசாம்பிக் நாட்டுப் போக்குவரத்து அமைச்சர் மேச்சுவஸ் மகலாவும் அந்த ரயிலில் பயணம் செய்தார்.
அதைக் காட்டும் காணொளியை அமைச்சர் ஜெய்சங்கர் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
'ரயில் இந்தியா' தொழில்நுட்ப, பொருளியல் சேவை எனும் உள்கட்டமைப்பு நிறுவனத்தின் முதன்மை நிர்வாக இயக்குநர் ராகுல் மிட்டல் தங்களுடன் அப்பயணத்தில் இணைந்து கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அந்த ரயில் பயணத்தின்போது செய்தியாளர் கூட்டம் நடத்தப்பட்டது. அது தொடர்பான காணொளிப் பகுதியையும் அவர் டுவிட்டரில் பதிவிட்டார்.
ஓடும் ரயிலில் செய்தியாளர் கூட்டம் நடத்தியது புதுமையான அனுபவமாக இருந்தது என்று அவர் குறிப்பிட்டார்.
மொசாம்பிக் நாட்டு வெளியுறவுத் துணையமைச்சர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களைச் சந்தித்துப் பேசியதாகவும் பயங்கரவாதத்தை எதிர்த்தல், பேரழிவில் இருந்து மீண்டுவருதல், பசுமை வளர்ச்சி உள்ளிட்ட அம்சங்கள் குறித்துக் கலந்துரையாடியதாகவும் திரு ஜெய்சங்கர் தெரிவித்தார்.
மொசாம்பிக் நாட்டில் நீடித்த நிலைத்தன்மை தொடர்பான மேம்பாட்டுத் திட்டங்களுக்கு இந்தியாவின் ஆதரவைத் தாம் மறுஉறுதிப்படுத்தியதாக அவர் குறிப்பிட்டர்.

