பெங்களூரு: கர்நாடகா பாரதிய ஜனதாவிலிருந்து யார் விலகினாலும் தொண்டர்கள் உறுதியாக கட்சியில் இருக்கின்றனர் என்று அம்மாநிலத்தை ஆளும் அக்கட்சி யின் முதல்வரான பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.
இம்மாநிலத்தில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலுக்கு 212 தொகுதிகளுக்கு பாஜக வேட் பாளர்களை அறிவித்துள்ளது.
ஆனால் முக்கிய உயர்மட்டத் தலைவர்கள், பிரமுகர்கள் சிலருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அவர்கள் மற்ற கட்சிகளுக்குத் தாவி வருகின்றனர். இதனால் கர்நாடகா பாஜக தலைமை கலகலத்துப் போயுள்ளது.
இந்த நிலையில் அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு பெங் களூரு விதான சவுதா வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முதல்வர் பசவராஜ் செய்தியாளர்களிடம் பேசினார்.
"தேர்தலில் போட்டியிட பொதுவாக ஆளுங்கட்சியில் அதிகமானோர் வாய்ப்பு கேட்பது வழக்கம். சில தலைவா்கள் எம்.எல்.ஏ. ஆக வேண்டும் என்ற ஆசையில் கட்சியைவிட்டு வெளியேறி உள்ளனர். அவர்கள் சென்றாலும் தொண்டர்கள் கட்சியில்தான் உள்ளனர். கட்சி வலுவாக உள்ளது," என்றார் திரு பசவராஜ் பொம்மை.
பா.ஜனதாவில் வாய்ப்புக் கிடைக்காத எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் மற்றும் நிர்வாகிகள் அக்கட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். அக்கட்சியைவிட்டு பலர் விலகி காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சியில் சேர்ந்து வருகின்றனர்.
வேட்பாளர் பட்டியல் வெளியாவதற்கு முன்பே பா.ஜனதாவை சேர்ந்த எம்.எல்.சி.க்கள் புட்டண்ணா, பாபுராவ் சின்சனசூர், என்.ஒய்.கோபாலகிருஷ்ணா எம்.எல்.ஏ. ஆகியோர் கட்சியிலிருந்து விலகி காங்கிரசில் சேர்ந்தனர்.
பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியானதும் வாய்ப்பு கிடைக்காததால் அமைச்சர் எஸ்.அங்கார், எம்.எல்.ஏ.க்கள் எம்.பி.குமாரசாமி, நேரு ஒலேகர், கூளிகட்டி சேகர் உள்ளிட்டோர் பதவி வில கினர். பா.ஜனதா மூத்த தலைவர் ஈசுவரப்பா தேர்தல், அரசியலில் இருந்து விலகுவதாக ஏற்கென வே அறிவித்துவிட்டார்.
வாய்ப்பு கிடைக்காத முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் தனித்து போட்டியிடுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதனால் அந்த தொகுதிக்கு பா.ஜனதா இன்னும் வேட்பாளரை அறிவிக்கவில்லை. இந்த நிலையில் அதிருப்தியாளர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் கர்நாடகா கட்சித் தலைமை இறங்கியுள்ளது. இதற்காக கர்நாடக பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் அருண்சிங், தேர்தல் பொறுப்பாளரான மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், முதல்வர் பசவராஜ், முன்னாள் முதல்வர் எடியூரப்பா ஆகியோர் தீவிர முயற்சி யில் ஈடுபட்டுள்ளனர்.

