பெங்களூரு: காதலியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது அவருக்குக் கேக் ஊட்டிவிட்ட காதலன், திடீரென கழுத்தை அறுத்து அப்பெண்ணைக் கொலை செய்தான்.
காதலியின் பெற்றோரது கண்முன்னே இந்தக் கொடூரம் அரங்கேறி உள்ளது. காதலன் கைது செய்யப்பட்டுள்ளான்.
பெங்களூருவைச் சேர்ந்த 24 வயதான நவ்யா காவல்துறையில் பணியாற்றி வந்தார். அவரும் பிரசாந்த் என்ற இளையரும் ஆறு ஆண்டுகளாகக் காதலித்து வந்தனர். இருவரது குடும்பத்தாரும் நண்பர்கள் என்பதால் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பாது என இருவரும் நம்பினர்.
இந்நிலையில் நவ்யா அண்மைக்காலமாக இன்னொரு இளையருடன் ரகசியமாகப் பேசி வந்ததாகவும் அதனால் பிரசாந்த் ஆவேசம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. கடந்த 14ஆம் தேதி நவ்யாவின் குடும்பத்தார் அவரது பிறந்தநாளைக் கொண்டாடியபோது பிரசாந்துக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.
அந்நிகழ்வின்போது நவ்யாவுக்கு கேக் ஊட்டிவிட்டார் பிரசாந்த். ஆனால் அப்போது சற்றும் எதிர்பாராதவிதமாக தன்னிடம் இருந்த கத்தியைக் கொண்டு நவ்யாவின் கழுத்தை அறுத்தார். இதையடுத்து ரத்தம் பீறிட்ட நிலையில், கீழே விழுந்த நவ்யா ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடினார்.
அவரது பெற்றோர் கண்முன்னே இக்கொடூரத்தை அரங்கேற்றினார் பிரசாந்த். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நவ்யா, முன்பே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

