லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் டிராக்டர் வாகனம் ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் நிகழ்ந்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தின் அஜ்மத்பூர் என்ற பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் ஊரில் இருந்து தினமும் சில கிலோமீட்டர்கள் தூரம் சென்று கர்ரா ஆற்றில் நீர் எடுத்துக்கொண்டு வீடு திரும்புவது வழக்கம். அந்த வகையில், சனிக்கிழமையன்று தண்ணீர் எடுப்பதற்காக பலர் டிராக்டரில் சென்றுகொண்டிருந்தனர்.
ஷாஜஹான்பூர் பகுதியில் உள்ள பாலத்தின் மீது டிராக்டர் சென்றபோது, எதிர்பாராதவிதமாக அது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடத் தொடங்கியது. பின்னர் பாலத்தை ஒட்டியுள்ள ஆற்றில் அது கவிழ்ந்தது.
டிராக்டரில் சென்றவர்கள் உயிருக்குப் போராடிய நிலையில், விபத்து குறித்து தகவல் அறிந்த காவல்துறையினரும் தீயணைப்புத் துறையினரும் விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். விபத்தில் எட்டு சிறுவர்கள், இரண்டு பெண்கள் உட்பட 11 பேர் உயிரிழந்துவிட்டனர். 24 பேர் காயமடைந்துள்ளனர்.

