சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பதிண்டா ராணுவ முகாமில் இம்மாதம் 12ஆம் தேதி நான்கு வீரர்களைச் சுட்டுக்கொன்றதன் தொடர்பில் ராணுவ வீரர் ஒருவரைக் காவல்துறை கைதுசெய்துள்ளது.
முன்னதாக, வீரர்கள் கொல்லப்பட்ட பாசறையிலிருந்து இருவர் வெளியேறியதைத் தான் கண்டதாக தேசாய் மோகன் என்ற அந்த ராணுவ வீரர், மேஜர் அசுதோஷ் சுக்லாவிடம் கூறி இருந்தார். முகமூடி அணிந்த இருவர் காட்டுப் பகுதிக்குள் தப்பியோடியதாகவும் அவர் சொன்னார்.
இந்நிலையில், அந்நான்கு வீரர்களும் தம்மைத் துன்புறுத்தி வந்ததால் அவர்களைச் சுட்டுக்கொன்றுவிட்டதைக் காவல்துறை விசாரணையின்போது தேசாய் மோகன் ஒப்புக்கொண்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தேசாய் மோகன் கைதுசெய்யப்பட்டுள்ளதை உறுதிப்படுத்திய பதிண்டா மூத்த காவல்துறைக் கண்காணிப்பாளர் குல்னீத் சிங் குரானா, அதே நேரத்தில் மேல்விவரங்களை வெளியிட மறுத்து விட்டார்.
சுட்டுக்கொல்லப்பட்ட நால்வரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கமலேஷ், யோகேஷ்குமார் என்ற இருவரும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.

