புதுடெல்லி: கடந்த மார்ச் மாதத்துடன் முடிந்த நிதியாண்டில் இந்தியாவில் 'ஆப்பிள்' நிறுவனம் ரூ.49,100 கோடி (S$8 பில்லியன்) வருவாய் ஈட்டியது.
இது அதற்கு முந்திய நிதி ஆண்டைவிட கிட்டத்தட்ட 50% அதிகம். கடந்த 2021-22ஆம் ஆண்டில் இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் ரூ.33,500 கோடி வருவாய் ஈட்டியிருந்தது.
இந்தியாவில் 700 மில்லியன் பேர் திறன்பேசிப் பயனாளர்கள் உள்ள நிலையில், அவர்களில் நான்கு விழுக்காட்டினர் மட்டுமே ஐஃபோன் பயன்படுத்துகின்றனர். இதனையடுத்து, இந்தியாவில் வலுவாகக் காலூன்ற 'ஆப்பிள்' இலக்கு கொண்டுள்ளது.
அவ்வகையில், ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் தனது முதலாவது நேரடி விற்பனை நிலையத்தை இன்று திறக்கவுள்ளது. மும்பையில் ஒரு வணிக வட்டாரத்தில் அந்நிலையம் அமைந்துள்ளது. இருநாள்களுக்குப் பிறகு தலைநகர் புதுடெல்லியில் 'ஆப்பிள்' நிலையம் திறக்கப்படவுள்ளது. இந்நிகழ்வுகளுக்காக அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் இந்தியா சென்றுள்ளார்.

