திருப்பதி: ஆந்திரா மாநிலத்தில் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் நிகழ்ந்த தீ விபத்தில் காட்சிக் கூடத்தில் வைக்கப்பட்டிருந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட மின்சார மோட்டார் சைக்கிள்கள் எரிந்து நாசமாயின.
பலசா-கஷிபுகாவில் உள்ள பகவதி தியேட்டர் சாலையில் உள்ள காட்சிக் கூடத்தில் விற்பனைக்காக மோட்டார் சைக்கிள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
புதன்கிழமை இரவு ஊழியர் ஒருவர் மின்சார மோட்டார் சைக்கிளுக்கு மின்னேற்றிக் கொண்டிருந்தார். அப்போது மின்கலன் திடீரென வெடித்து சிதறியது.
இதனால் காட்சிக்கூடத்தில் தீ மூண்டது. அங்கிருந்த ஊழியர்கள் அதிர்ச்சியடைந்து வெளியே ஓடினர்.
இது குறித்து அறிந்த ஸ்ரீகாகுளம் தீயணைப்பு துறை, காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
ஆனால் தீ அதற்குள் அருகில் இருந்த ஹார்ட்வேர் கடை மற்றும் மதுபானக் கடைக்கு பரவி எரிந்தது. தீ அணைப்பாளர்கள் பல மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இருப்பினும் ஐம்பதுக்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் எரிந்து விட்டதாக அந்த காட்சிக் கூடத்தின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
அவற்றின் மதிப்பு 50 லட்ச ரூபாய் எனக் கூறப்படுகிறது. காவல்துறையினர் தீ விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

