புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று தலை தூக்கியிருக்கும் நிலையில் அறுபது லட்சம் முறை போடக்கூடிய கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக சீரம் நிறுவனம் அறிவித்து உள்ளது. கடந்த சில நாள்களாக தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதையடுத்து கொரோனா கட்டுப்பாடு வழிமுறைகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதார அமைச்சு அறிவுறுத்தியது.
இந்த நிலையில் புனேவில் தடுப்பூசி களைத் தயாரிக்கும் பிரபல சீரம் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான அதர் பூனாவாலா நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது, "இந்தியாவில் தற்போது ஏற்பட்டு வரும் கொரோனா கிருமி பரவல் தீவிரமானது அல்ல, இது ஒரு லேசான திரிபு மட்டுமே. முன்னெச்சரிக்கை நட வடிக்கையாக வயதானவர்கள் பூஸ்டர் தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ளலாம்," என்றார். "ஆனால் அதை செலுத்திக் கொள்ளலாமா, வேண்டாமா என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பமாகும். தற்போது எங்களிடம் 50 முதல் 60 லட்சம் வரை கோவோவேக்ஸ் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களில் இதே அளவு கொவிஷீல்ட் தடுப்பூசிகள் தயாரிக்கப்படும்." என்று அவர் தெரிவித்தார்.

