புதுடெல்லி: மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா மீதான வழக்கில் சிபிஐ கூடுதல் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.
இதனால் இவ்வழக்கில் அவருக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த வழக்கு தொடர்பாக கடந்த வாரம் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் ஏறக்குறைய ஒன்பது மணி நேரத்துக்கு சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். மேலும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
அத்துடன், கவிதாவின் முன்னாள் கணக்காய்வாளர் புட்சி பாபு, மதுபான விற்பனையாளர் உள்ளிட்ட மேலும் சிலரது பெயர்கள் கூடுதல் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளது.
இதனால் கடும் ஆவேசமடைந்துள்ள முதல்வர் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி தேசியக் கட்சியாக மாறியுள்ளதால், மத்திய அரசு தங்களை குறிவைத்துள்ளதாகச் சாடியுள்ளார். ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் மேற்கொள்ளும் வளர்ச்சிப் பணிகளைக் களங்கப்படுத்தவே வழக்கு தொடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
தம் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் மறுப்பு தெரிவித்துள்ள மணிஷ் சிசோடியா, தமக்கு எதிராக சிபிஐயிடம் எந்த ஆதாரமும் இல்லை என்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிணை மனுவில் குறிப்பிட்டிருந்தார். கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி அவரை சிபிஐ கைது செய்தது. இந்நிலையில், அவர் மீது துணைக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இவ்வழக்கு விசாரணை மேலும் விரிவடையும் வாய்ப்புள்ளதாகவும் மேலும் சிலர் சிக்கக்கூடும் என்றும் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே மணிஷ் சிசோடியாவின் மனைவி சீமா உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

