புதுடெல்லி: குஜராத்தில் நடைபெற்ற சௌராஷ்டிரா-தமிழ் சங்கமம், நாட்டின் ஒற்றுமைக்கு வலுசேர்க்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார்.
தமிழகத்தில் வசிக்கும் சௌராஷ்டிரா மொழி பேசும் மக்களை அவர்களின் பூர்வீக இடமான குஜராத்தின் சௌராஷ்டிரா பகுதிக்கு அழைத்துச் செல்லும் சௌராஷ்டிரா-தமிழ் சங்கமம் நிகழ்ச்சி, இம்மாதம் 17ஆம் தேதி தொடங்கியது.
நேற்று அதன் நிறைவு அங்கம் இடம்பெற்றது.
நிறைவு விழாவில் பிரதமர் மோடி காணொளி வாயிலாக உரையாற்றினார்.
"சர்தார் வல்லபாய் பட்டேலுக்கும் மகாகவி சுப்ரமணிய பாரதியாருக்கும் இருந்த தேசிய உணர்வு, இந்த சௌராஷ்டிரா-தமிழ் சங்கமம் நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் உயிர் பெற்றிருக்கிறது," என்று பிரதமர் தமது உரையில் குறிப்பிட்டார்.
"இத்தகைய நிகழ்ச்சிகள், நாட்டின் ஒற்றுமையை மேலும் வலுப்படுத்துகின்றன. எனவே, இந்நிகழ்ச்சியின் மூலம் சர்தார் வல்லபாய் பட்டேலின் ஆசி இந்தியர்கள் அனைவருக்கும் கிடைத்திருக்கிறது," என்றார் திரு மோடி.
"சுதந்திரப் போராட்டத் தியாகிகளான நம் முன்னோர்கள் ஒரே பாரதம், உன்னத பாரதம் என்பதைப் பார்க்கத் துடித்தனர்.
"அவர்களின் கனவை இந்த நிகழ்ச்சி நனவாக்கி இருக்கிறது. சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகு நாட்டில் ஏற்பட்டிருக்கும் புதிய கலாசாரப் பாரம்பரியத்தின் எடுத்துக்காட்டுகளாக இதுபோன்ற நிகழ்ச்சிகள் திகழ்கின்றன," என்றார் பிரதமர்.
இந்தியாவிற்கு தற்போது தேவை நல்லிணக்கம் என்று அவர் குறிப்பிட்டார்.
நாட்டு மக்களுக்கு இடையே ஒத்துழைப்பு இருக்க வேண்டுமே தவிர, கலாசார மோதல்கள் இருக்கக்கூடாது.
"நாட்டிற்குத் தேவை இத்தகைய சங்கமங்கள்தான்; போராட்டங்கள் அல்ல.
"வேறுபாடுகளைக் கண்டறிவது நமக்குத் தேவையில்லை. உணர்வுபூர்வமான ஒற்றுமைதான் தேவை.
"இந்தியாவின் தனித்துவமான பாரம்பரியமே, அனைவரையும் இணைத்துக்கொள்ளும் பண்புதான்.
"ஏற்றுக்கொள்வதும் அனைவரோடும் இணைந்து முன்னேறிச் செல்வதுமே நாட்டின் பாரம்பரியப் பண்புகள்.
"பல நூற்றாண்டுகளாக இந்தியாவில் சங்கமங்கள் நிகழ்ந்து வருகின்றன.
"கும்பமேளா ஒருவகையில் சங்கமம்தான். பல்வேறு சிந்தனைகள், கலாசாரங்களின் சங்கமம் அது.
"நாட்டில் நிகழ்ந்தஅத்தகைய நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றுமே ஒற்றுமைக்கு முக்கியப் பங்காற்றி இருக்கின்றன. நாடு சுதந்திரம் அடைந்து தற்போது 75 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், சௌராஷ்டிரா-தமிழ் சங்கமம் நிகழ்கிறது. இது நர்மதை, வைகை எனும் நதிகளின் சங்கமம். இது தாண்டியா நடனம், கோலாட்டம் இரண்டின் சங்கமம்'' என்று திரு மோடி கூறினார்.

