புதுடெல்லி: எரிசக்தி, உணவுப் பாதுகாப்பு ஆகிய அம்சங்கள் தொடர்பில் இந்தியா மற்ற நாடுகளுடன் இணைந்து பணியாற்றும் என்று வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
பனாமாவில் நடைபெறும் நான்காவது இந்தியா-மத்திய அமெரிக்க ஒருங்கிணைப்புக் கட்டமைப்பு ('சிகா') அமைச்சர்நிலைக் கூட்டத்தில் அவர் உரைஆற்றினார்.
தெற்கு நாடுகள் எதிர்கொள்ளும் உடனடி உலகச் சவால்கள் எரிசக்தியும் உணவுப் பாதுகாப்பும் என்று குறிப்பிட்ட அமைச்சர் ஜெய்சங்கர், பல்வேறு அனைத்துலக, பன்முனைக் கருத்தரங்குகளில் இந்தியாவை ஆதரிக்கும் 'சிகா' அமைப்பிற்கு நன்றி தெரிவித்தார்.
இந்தியாவுடன் அது வலுவான உறவு கொண்டிருப்பதற்கும் அவர் நன்றி கூறினார்.
எரிசக்தியும் உணவுப் பாதுகாப்பும் உடனடிச் சவால்கள் என்றபோதிலும் வளர்ச்சி, மேம்பாடு, வர்த்தகம், முதலீடு, வேலைவாய்ப்பு, வறுமை உள்ளிட்ட நீண்டகாலச் சவால்களும் இருப்பதை அமைச்சர் ஜெய்சங்கர் சுட்டினார்.
இந்தியா கூடுதலாகச் செயலாற்றத் தயாராக இருப்பதாகத் தெரிவித்த அவர், அதேபோன்ற ஒத்துழைப்பை 'சிகா' அமைப்பின் நாடுகளிடமும் எதிர்பார்ப்பதாகக் கூறினார்.
உணவுப் பாதுகாப்புக்கு நீண்டகாலத் தீர்வாக சிறு தானிய உற்பத்தியை விரிவுபடுத்த இந்தியா திட்டமிடுகிறது என்று தம் உரையில் திரு ஜெய்சங்கர் குறிப்பிட்டார்.
மின்னிலக்கம், புதிய வர்த்தக நிறுவனங்கள், மருந்தாக்கம், எரிசக்தித் தயாரிப்பு, அறிவியல், தொழில்நுட்பம் போன்ற அம்சங்களில் 'சிகா' அமைப்பைச் சேர்ந்த நாடுகளுடன் இணைந்து பணியாற்ற இந்தியா விரும்புவதாக அவர் கூறினார்.
'ஜி20' கூட்டமைப்பின் தலைமைத்துவத்தை ஏற்றுள்ள இந்தியா 'ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்' எனும் கொள்கையை நம்புவதாகவும் 'சிகா' நாடுகளுடனும் அதையே பின்பற்ற விரும்புவதாகவும் அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.

