கேரளா: கேரளா, இடுக்கி
சின்னக்கானல் பகுதியில்
மக்களை அச்சுறுத்தி வந்த அரிக்கொம்பன் யானையைப் பிடித்து தமிழக கேரள எல்லையில் அமைந்துள்ள தேனி மாவட்டத்தின் கூடலூர் அருகே வனப் பகுதியில் விடப்பட்டது. இது ஆறு பேரைக் கொன்றதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அரிக்கொம்பன் ஊருக்குள் புகுவதும் சாலையோர கடைகளில் அரிசி இருக்கிறதா என்று தேடிப் பார்த்து, கடையை உடைப்பதும் தேயிலைத் தோட்டங்களுக்குச் செல்லும் பொதுமக்களை விரட்டுவதும் குடியிருப்புப்
பகுதிகளில் வலம் வந்து மக்களை அச்சுறுத்துவதும் என்று பொதுமக்களின் நிம்மதியைக் குலைத்து வந்தது.
இந்நிலையில் யானையைப் பிடித்து வேறு பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
யானையை அமைதிப்படுத்தும் கருவி மூலம் பிடிப்பது அறிவியலுக்கு எதிரானது என விலங்குகள் பாதுகாப்பு அமைப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அதனால் உயர்நீதி மன்றம் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கக்கூடாது என்று உத்தரவிட்டது.
இந்த உத்தரவைக் கண்டிக்கும் விதமாக பொதுமக்கள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தியதால், யானையைப் பிடிப்பது தொடர்பாக ஓர் உயர்மட்டக் குழுவை நீதிமன்றம் நியமித்தது.
இந்த உயர்மட்டக் குழு யானையை மயக்க ஊசி செலுத்திப் பிடிக்க பரிந்துரை செய்ததையடுத்து 150 பேர் கொண்ட வனத்துறை அதிகாரிகள் மயக்க ஊசி அடங்கிய துப்பாக்கிகளுடன் கடந்த இரண்டு நாள்களாக அரிக்கொம்பன் யானையைத் தேடி வந்தனர்.
அரிக்கொம்பனைப் பிடிக்க 4 கும்கி யானைகளும் பயன்
படுத்தப்பட்டன.
இந்நிலையில் யானை சின்னக்கால் அருகே உள்ள வனப்பகுதியில் இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து வனத்துறையினர் பட்டாசுகள் வெடித்து யானையை பாலம் பகுதி வழியாகக் கொண்டு வந்தனர்.
பின்னர் மயக்க ஊசி செலுத்தி அதன் கால்கள் கட்டப்பட்டு, கண்ணில் துணி போர்த்தப்பட்டு கும்கி யானைகள் உதவியுடன் யானையை வாகனத்தில் ஏற்றி அதனை குமுளி பகுதிக்கு கொண்டுவந்து கூடலூர் அருகே வனப் பகுதியில் விட்டனர்.

