மும்பை: மும்பைக்கும் குஜராத்தின் அகமதாபாத்துக்கும் இடையிலான அதிவேக ரயிலுக்கான பாதையைக் கட்டுவதற்கு முன்பு அதற்குத் தேவையான பயிற்சியை 1,000 இந்தியப் பொறியாளர்களுக்கு ஜப்பானிய நிபுணர்கள் அளிக்க இருக்கின்றனர்.
ஜப்பானில் பயன்படுத்தப்படும் 'ஜே ஸ்லாப்' முறை, மும்பை-அகமதாபாத் அதிவேக ரயில் பாதையிலும் பயன்படுத்தப்படும்.
இந்தத் தனித்துவம் வாய்ந்த முறையைக் கட்ட தொழில்நுட்பர்களுக்கு உயர்நிலை திறன்கள் தேவைப்படும் என்று இந்தியாவின் தேசிய அதிவேக ரயில் சேவை நிறுவனம் தெரிவித்தது.
இந்தியப் பொறியாளர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சி 15 அம்சங்களில் கவனம் செலுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுமானத் தள மேலாளர்களுக்கான பயிற்சி, ஸ்லாப் தண்டவாளத்தைப் பொருத்தும் பணிகள், வெல்டிங் பணிகள் போன்ற பயிற்சிகள் அளிக்கப்படும்.
"இந்தியப் பொறியாளர்கள், மேற்பார்வையாளர்கள், தொழில்நுட்பர்கள் ஆகியோருக்கு ஏறத்தாழ 20 ஜப்பானிய நிபுணர்கள் பயிற்சி அளித்து அவர்களுக்குத் தேவையான திறன்கள் உள்ளதா என்பதை உறுதி செய்வர்," என்று தேசிய அதிவேக ரயில் சேவை நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராஜேந்திர பிரசாத் கூறினார்.

