புதுடெல்லி: நிலக்கரி, எண்ணெய், இயற்கை எரிவாயு போன்ற எரிபொருள்களின் பயனீட்டை நிறுத்துவதற்கான காலக்கெடு ஒன்றை நிர்ணயிப்பதற்குப் பதிலாக, கரிமக்கழிவு அளவைக் குறைப்பதற்கான வழிகாட்டி திட்டம் ஒன்றை ஜி20 நாடுகள் தேர்ந்தெடுத்துக்கொள்ளும் வகையில் கருத்திணக்கம் ஒன்றை எட்டுவதற்கு இந்தியா முயன்று வருகிறது.
சீனா ஆதரவுடன் இந்தியா அந்த முயற்சிகளில் இறங்கி இருப்பதாக இந்திய அரசை சேர்ந்த மூன்று அதிகாாரிகள் தெரிவித்து இருக்கிறார்கள்.
ஜி20 தொழில்துறை நாடுகளின் தலைமைப் பொறுப்பை இப்போது இந்தியா ஏற்று இருக்கிறது. வரும் செப்டம்பரில் இந்தியாவில் நடக்கவிருக்கும் ஜி20 உச்சநிலை மாநாட்டில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட உள்ளது.
'பல்வேறு எரிசக்தி வழிமுறைகள்' என்ற ஒரு பதத்தை அந்த அறிக்கையில் அறிமுக்கப்படுத்தலாம் என்று இந்தியா ஆர்வமுடன் இருக்கிறது.
இந்த முயற்சிக்கு சீனா, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் ஆதரவு அளித்து இருப்பதாகவும் அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
எரிசக்தி உருமாற்றத்திற்கான பல்வேறு எரிசக்தி வழிமுறைகள் ஏற்பாட்டின் மூலம் நாடுகள், அறவே கரிமக் கழிவற்ற நிலையைச் சாதிக்க முயற்சிகளை மேற்கொள்ளும் அதேவேளையில், நிலக்கரியைகூட பயன்படுத்த விரும்பினால் பயன்படுத்தலாம்.
இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் கடந்த ஏப்ரல் மாதம் ஜி20 எரிசக்தி உருமாற்ற பணிக்குழு கூட்டம் நடந்தது.
அதில் கலந்துகொண்ட பணக்கார நாடுகள் நிலக்கரி பயனீட்டுக்கு முடிவு கட்ட காலக்கெடு ஒன்றை யோசனையாகத் தெரிவித்தன.

