புதுடெல்லி: பாலியல் குற்றச்சாட்டு சர்ச்சையில் சிக்கியுள்ள இந்திய மற்போர் கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங்கை கைது செய்யும்வரை போராட்டம் தொடரும் என அறிவித்துள்ள மற்போர் வீராங்கனைகள், தாங்கள் வென்ற பதக்கங்களையும் விருதுகளையும் திரும்ப ஒப்படைக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷண் சரண்சிங், பாலியல் ரீதியாக தங்களைத் துன்புறுத்தியதாக ஒரு சிறுமி உட்பட ஏழு மற்போர் வீராங்கனைகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
அவரைக் கைது செய்ய வலி யுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த 23ஆம் தேதி முதல் போராட்டத்தில் மற்போர் வீராங்கனைகள் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால், தன்மீதான குற்றச் சாட்டில் உண்மை இல்லை என மறுத்துள்ள சரண்சிங், இப்போராட்டம் தனக்கு எதிரானது அல்ல என்றும் பாஜகவுக்கு எதிரானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, நேற்று முன்தினம் நள்ளிரவில் ஜந்தர் மந்தரில் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள் வீரர், வீராங்கனைகளிடம் மதுபோதையில் தகராறு செய்ததாக தகவல் வெளியானது.
அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டு, காவலர்கள் தாக்கியதில் சில மற்போர் வீராங்கனைகளுக்கு காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்குத் தங்கப்பதக்கம் வென்ற வீராங்கனை வினேஷ் போகத் பேசியபோது, "இப்படிப்பட்ட நாள்களைக் காண்பதற்காகவா நாட்டிற்காக பதக்கங்களை வென்றோம்?" என கண்கலங்கியபடி கேட்டார்.
இதனிடையே இந்த விவ காரத்தில் மத்திய-மாநில அரசுகள் மௌனம் சாதிப்பதைக் கண்டிக்கும் விதத்தில் விருதுகளையும் பதக்கங்களையும் திரும்ப ஒப்படைக்க முடிவு செய்துள்ளதாக வீராங்கனைகள் கூறியுள்ளனர்.
ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா டுவிட்டர் பதிவில், "நீதி கேட்டு தெருக்களில் போராடும் மல்யுத்த வீரர்களைப் பார்ப்பது வேதனையானது. நீதியை நிலைநாட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்,'' என்று கூறினார்.
"செல்வாக்கான பெண்களுக்கு நீதி கிடைக்காமல் தெருக்களில் போராட்டம் நடத்தும் சூழலில், குரல் கொடுக்காத, வெளியில் சொல்லமுடியாத பெண்களின் நிலை என்ன வாகும்?" என்று சமூக ஆராய்ச்சி மைய இயக்குநர் டாக்டர் ரஞ்சனா குமாரி வினவியுள்ளார்.

