திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தின் கொல்லம் மாவட்டத்தில் குடும்பத் தகராறில் காயமடைந்த சந்தீப் என்ற பள்ளி ஆசிரியர் ஒருவரை சிகிச்சைக்காக காவல்துறையினர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
மதுபோதையில் இருந்த சந்தீப், தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் வந்தனா தாஸ் (23) என்பவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அங்கிருந்த கத்திரிக்கோலால் குத்திக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.
இச்சம்பவத்தைக் கண்டித்தும், தங்களுக்குப் பாதுகாப்பு வழங்க வலியுறுத்தியும் மாநிலம் முழுவதும் அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அரசு மருத்துவமனைகளுக்கு போதிய பாதுகாப்பு வழங்க ஏதுவாக புதிய சட்டத்தை அரசு உடனே இயற்ற வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
புதிய சட்டம்
இதையடுத்து, முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் உயர்நிலைக் குழுவின் அவசரக் கூட்டம் கூட்டப்பட்டது.
அக்கூட்டத்தில், சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ், தலைமைச் செயலாளர் வி.பி.ஜாய், சுகாதாரம், சட்டம் மற்றும் மருத்துவக் கல்வி ஆகிய துறை செயலாளர்கள், காவல் துறை தலைவர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதைத் தடுக்க புதிய சட்டம் இயற்றுவது உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. கேரள மாநிலம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் மருத்துவர்கள் அவசர சிகிச்சை சேவைகளில் மட்டுமே ஈடுபட்டனர்.

