திருப்பதி: ஆந்திர மாநிலத்தின் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழிபட வரும் பக்தர்கள் கடும் சோதனைகளுக்குப் பிறகே சாமியை வழிபட அனுமதிக்கப்படுகின்றனர்.
அவ்வாறு இருந்தும், கடந்த 7ஆம் தேதி வழிபட வந்திருந்த பக்தர் ஒருவர், சோதனையையும் மீறி கோவிலுக்குள் தனது கைத்தொலைபேசியைக் கொண்டு சென்றார்.
மூலவர் மீதுள்ள ஆனந்த நிலையம் கோபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தனது கைத்தொலைபேசி மூலம் காணொளிப் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார்.
இந்தக் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியது. இதனைக் கண்ட திருப்பதி ஆலய நிர்வாக அதிகாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். கடுமையான சோதனைகளையும் மீறி அவர் எப்படி கோவிலுக்குள் கைத்தொலைபேசியை எடுத்துச் சென்றார்.
பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டவர்களின் மெத்தனப்போக்கால் இந்தச் சம்பவம் நடந்ததா என விசாரணை நடத்தி வந்தனர். காணொளிப் படம் பிடித்த பக்தர் குறித்து காவல்துறையில் புகார் செய்தனர்.
காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்தச் சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவிலின் கண்காணிப்பு கேமரா காட்சிகளின் உதவியால் ஓர் ஆடவரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். அந்த ஆடவர் தெலுங்கானாவைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.