அம்பலப்படுத்திய ஜிஎஸ்டி நுண்ணறிவு இயக்குநரகம், வருவாய் புலனாய்வு இயக்குநரகம்
புதுடெல்லி: நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 24 பெரிய இறக்குமதி நிறுவனங்கள் ஏறத்தாழ 11 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பொருள் சேவை வரி (ஜிஎஸ்டி) ஏய்ப்பில் ஈடுபட்டது அம்பலமாகி உள்ளது.
ஜிஎஸ்டி நுண்ணறிவு இயக்குநரகம் (டிஜிஜிஐ), வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (டிஆர்ஐ) ஆகியவை இந்த வரி ஏய்ப்பை கண்டுபிடித்ததாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
இந்த வரி ஏய்ப்பு தொடர்பாக ஏழு வெவ்வேறு துறைகள் சார்ந்த நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளதாகவும் ஜவுளித்துறை மட்டுமல்லாமல், எஃகு, மருந்து, நகைகள் ஆகியவற்றுடன் தொடர்புள்ள நிறுவனங்கள் இந்த வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் மேற்குறிப்பிட்ட இயக்குநரகங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த இருபது நாள்களில் மும்பை, கோல்கத்தா, சென்னையில் உள்ள இறக்குமதியாளர்களுக்கு விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தற்போது வரி ஏய்ப்பு தொடர்பாக மேலும் சில இறக்குமதியாளர்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் ஜிஎஸ்டி நுண்ணறிவு இயக்குநரகம் கூறியதாக ஊடகச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே பொருள் சேவை வரி ஏய்ப்பில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன.
குறிப்பாக கடந்த 2021-22 நிதியாண்டில் மட்டும் ஜிஎஸ்டி நுண்ணறிவு இயக்குநரகம் வரி ஏய்ப்பு தொடர்பாக உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு ரூ.21,000 கோடியை மீட்டுள்ளது. எனினும் அவ்வாண்டு ரூ.54 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக அந்த இயக்குநரகம் தெரிவித்திருந்தது.
கடந்த 2022-23ஆம் நிதியாண்டில் 14,000 வரி ஏய்ப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை 2021-22ஆம் நிதியாண்டில் 12,574 ஆகவும், 2020-21இல் 12,596 ஆகவும் இருந்தது.
இதற்கிடையே, நாடு முழுவதும் ஜூலை 2017 முதல் பிப்ரவரி 2023 வரை மொத்தம் ரூ.3.08 லட்சம் கோடி அளவுக்கு பொருள் சேவை வரி ஏய்ப்பு நடந்துள்ளது என்று நாடாளுமன்ற மக்களவையில் மத்திய நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதில் ரூ.1.03 லட்சம் கோடிக்கு மேல் மீட்கப்பட்டுள்ளது என்றும் பிப்ரவரி 2023 வரை வரி ஏய்ப்பு செய்ததாக 1,402 பேரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர் என்றும் அந்த அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

