புதுடெல்லி: முதன் முறையாக தன் தந்தையை விமானத்தில் பயணம் மேற்கொள்ள வைத்த மகனுக்கு சமூக ஊடகங்களில் ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
டெல்லியைச் சேர்ந்த ஜாடின் லம்பா என்ற இளையரின் தந்தைக்கு விமானத்தில் செல்ல வேண்டும் என்பது நீண்டநாள் ஆசை. இதை அறிந்திருந்த ஜாடின் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்ற முடிவு செய்தார்.
அண்மையில் தன் தந்தையுடன் விமானத்தில் பயணம் செய்த அவர், தனது தந்தையின் மகிழ்ச்சியை காணொளியாகப் பதிவு செய்து, சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ளார். அதில் விமான நிலையத்தில் காத்திருந்த போதும், விமானத்தில் ஏறும்போதும் தந்தையின் முகத்தில் காணப்பட்ட உற்சாகத்தை ஜாடின் காட்சிப்படுத்தியுள்ளார். மேலும், விமானத்தில் அமர்ந்திருக்கும்போது அவர் தந்தையுடன் எடுத்துக்கொண்ட செல்ஃபி படமும் சமூக ஊடகப்பக்கத்தில் இடம்பெற்றுள்ளது.
இதைக்கண்டு நெகிழ்ந்துபோன பலரும், "ஒரு மகனாக தந்தையின் மகிழ்ச்சியை நீங்கள் முழுமையாக உணர்ந்தீர்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. உங்களுக்கு வாழ்த்துகள்," என்று குறிப்பிட்டுள்ளனர்.
நாள்தோறும் ஏராளமானோர் இதுபோன்று பலரது ஆசைகளை நிறைவேற்றி வைக்கின்றனர். எனினும் ஜாடின் தந்தையின் மகிழ்ச்சித் தருணங்களை ஒரு நொடி கூட இழந்துவிடாமல் முழுமையான பதிவு செய்ததுதான் அனைவரையும் கவர்ந்துள்ளது.

