பெங்களூரு: கர்நாடகாவில் அரசியல் கட்சியினர் போக்குவரத்து விதிகளை மீறியது தொடர்பாக 4.12 லட்சம் பேர் மீது வழக்குப் பதிவாகி உள்ளது. மேலும், 22.75 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்குகள் பெங்களூரு நகரில் மட்டும் பதிவானவையாகும்.
கர்நாடகாவில் அண்மையில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. பல்வேறு அரசியல் கட்சியினரும் தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டனர். அப்போது பெங்களூரு நகரில் பல்வேறு போக்குவரத்து விதிமீறல்கள் நடந்தன.
அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை மீறி கார்களில் சென்று பிரசாரம் மேற்கொண்டது, தலைக்கவசம் அணியாதது, கைப்பேசியில் பேசியபடி போக்குவரத்து சிக்னல்களில் நிற்காமல் சென்றது ஆகியவை தொடர்பில் வழக்குகள் பதிவாகி உள்ளன.
கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி முதல் மே 10ஆம் தேதி வரை கடந்த 25 நாட்களில் மட்டும் இவ்வளவு வழக்குகள் பதிவாகி உள்ளன என்றும் அவற்றை வசூலிப்பதில் போக்குவரத்துத்துறை முனைப்பு காட்டி வருகிறது என்றும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

