அகமதாபாத்: பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 198 இந்திய மீனவர்கள் விடுவிக்கப் பட்டனர். அவர்களில் குஜராத்தைச் சேர்ந்த 184 பேர் தங்கள் சொந்த ஊர் வந்தடைந்தனர். மூவர் ஆந்திரப்பிரதேசம், நால்வர் டையூ நகர், ஐவர் மகாராஷ்ட்ரா, இருவர் உ.பி.யைச் சேர்ந்தவர்கள்.
இவர்கள் அனைவரும் பஞ்சா பின் வாகா எல்லையில் உள்ள இந்திய அதிகாரிகள் வசம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், அவரவரின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அரபிக்கடலில் குஜராத்தை ஒட்டிய கடலோரப் பகுதிகளில் மீன்பிடித்துக்கொண்டிருந்த இந்திய மீனவர்களை எல்லையைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி பாகிஸ்தான் கடலோரக் காவல் படையினர் கைது செய்து அந்நாட்டுச் சிறையில் அடைத்தனர்.
இதுபோல் சிறையில் அடைக்கப்பட்டு ஏறக்குறைய 4 ஆண்டுகள் ஆன நிலையில், அவர்களை விடுவிக்க மத்திய அரசு தூதரக ரீதியில் நடவடிக்கைகளை எடுத்தது.
இதையடுத்து, பாகிஸ்தான் சிறையில் உள்ள 198 இந்திய மீனவர்கள் கடந்த 13ஆம் தேதி அன்று விடுவிக்கப்பட்டனர்.
ரயில் மூலம் குஜராத்தைச் சேர்ந்த 184 மீனவர்கள் வதோதரா ரயில் நிலையத்துக்கு நேற்று வந்து சேர்ந்தனர். அவர்களை மாநில மீன்வளத் துறை அமைச்சர் ராகவ்ஜி படேல் உள்ளிட்டோர் வரவேற்று, நான்கு பேருந்துகள் மூலமாக சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைத்தனர்.

