போபால்: மத்தியப் பிரதேச மாநிலத்தின் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுஹான், சாகர் நகரில் நடந்த ஒரு சமூகத்தினரின் மாநாட்டில் பேசிக்கொண்டிருந்தபோது, அவர் இருந்த மேடையில் திடீரென ஒரு குழந்தை வந்து விழுந்து பரபரப்பை ஏற்படுத்தியது.
முகேஷ் பட்டேல் என்று அடையாளம் காணப்பட்ட ஆடவர் ஒருவர், தனது ஒரு வயது மகனைத் தூக்கி, முதலமைச்சர் சவுஹான் பேசிக்கொண்டிருந்த மேடையை நோக்கி வீசி எறிந்ததாக உள்ளூர்வாசிகள் சிலர் தெரிவித்தனர்.
மேடைக்கருகே காவல் பணியில் ஈடுபட்டிருந்த தலைமைக் காவலர் ஒருவர், அதிரடியாக மேடைக்குவந்து அந்தக் குழந்தையைத் தூக்கி, அக்குழந்தையை அங்கு நின்றிருந்த தாயிடம் ஒப்படைத்தார். நல்லவேளையாக குழந்தைக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படவில்லை.
அந்தச் சம்பவத்தால் அங்கு சற்றுநேரம் பரபரப்பான சூழல் நிலவியது. மேடையில் இருந்த முதலமைச்சர் வேகமாக கீழே இறங்கி அக்குழந்தையின் பெற்றோரிடம் சென்று, ஏன் இவ்வாறு செய்தீர்கள் என்று கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த முகேஷ் பட்டேல், தனது குழந்தையின் இதயத்தில் இரண்டு ஓட்டைகள் உள்ளதாகவும், அவனுக்கு உடனடியாக சிகிச்சை மேற்கொள்ளா விட்டால் அவனுடைய உயிருக்கே ஆபத்து என்றும் மருத்துவர்கள் கைவிரித்துவிட்டனர் என்றார். "கடந்த ஆறு மாத காலமாக உதவிகேட்டு ஏறிஇறங்காத அலுவலகமே இல்லை. இருந்தும் மகனுக்குச் சிகிச்சை அளிக்க நிதிஉதவி செய்ய யாரும் முன்வந்தபாடில்லை.
"எனவேதான் தங்களைப் பார்த்தாலாவது மகனுக்கு விடிவுகாலம் பிறக்கும் என்று இங்கு வந்தேன். ஆனால், மேடைக்கு அருகே நான் அனுமதிக்கப்படவில்லை. உங்கள் கவனத்தை ஈர்க்கவே என் பிள்ளையை மேடையை நோக்கி தூக்கியெறிந்தேன்," என்று கண்கலங்கக் கூறினார். அதைக்கேட்ட முதலமைச்சர் சவுஹான், அந்த ஆடவருக்கு ஆறுதல் கூறிவிட்டு, உடனடியாக அங்கிருந்த ஆட்சியர் தீபக் ஆர்யாவை அழைத்து, அந்தக் குழந்தையின் சிகிச்சைக்குத் தேவையான உதவியைச் செய்ய ஆவன செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். கூலி வேலை செய்யும் முகேஷ் பட்டேல் சாஹாஜ்பூரைச் சேர்ந்தவர். தனது உழைப்பில்தான் வயதான அம்மா, மனைவி, ஐந்து வயது மகன், ஒரு வயது நரேஷ் ஆகியோரைக் காப்பாற்ற வேண்டும். இருந்தும் மகனின் முதல் கட்டச் சிகிச்சைக்காக அவர், தம்மால் இயன்றவரை செலவு செய்துள்ளார். கடைசியாக மகனுக்கு ஏற்பட்டுள்ள இதயப் பிரச்சினையைத் தீர்க்க வேண்டுமெனில் கிட்டத்தட்ட நான்கு லட்ச ரூபாய் செலவாகும் என்று தெரிந்ததும்தான் அவர் பல இடங்களில் உதவி கேட்டு மன்றாடினார்.
அந்தச் சிறுவனுக்கு ஜூன் 2ஆம் தேதி போபாலில் உள்ள சித்தாந்தா மருத்துவமனையில் தேவையான சிகிச்சை அளிக்கப்படும் எனத் தெரிகிறது.

