கர்நாடகாவில் டி.கே.சிவகுமார் பரபரப்புப் பேட்டி
புதுடெல்லி: கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றது காங்கிரஸ். இருந்தும் யார் முதல்வர் நாற்காலியில் உட்காரப்போகிறார் என்பது இன்னமும் குழப்பமாகவே உள்ளது.
காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல் காந்தி, கே.சி.வேணுகோபால் ஆகியோர், நேற்று இரவு கர்நாடக காங்கிரஸ் கட்சித் தலைவர் டிகே சிவகுமார், முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். நேற்றிரவு நிலவரப்படி, எப்படியும் 24 மணி நேரத்தில் கர்நாடக முதல்வர் யார் என்ற அறிவிப்பு வந்துவிடும் என்று கூறப்பட்டது.
இந்நிலையில், டிகே சிவகுமார், "நான் முதல் அமைச்சர் பதவி கேட்டு யாரையும் மிரட்டமாட்டேன். யாரையும் பிரிக்க விரும்பவில்லை. யார் முதுகிலும் குத்த மாட்டேன். வரலாற்றில் தவறான இடத்தைப் பிடிக்க நான் விரும்பவில்லை. எங்களது அடுத்த சவால் மக்களவைத் தேர்தலில் 20 தொகுதிகளில் வெற்றி பெறுவதுதான். காங்கிரஸ் கட்சி என்னுடையது," என்று கூறியுள்ளார்.
நேற்று முன்தினம் டெல்லியில் இருந்து கட்சித் தலைமை அழைப்பு விடுத்தும்கூட, தனக்கு வயிற்றுக்கோளாறு என்று கூறி, டெல்லி செல்வதைத் தவிர்த்துவிட்டார். பின்னர் நேற்று பிற்பகல் டெல்லிக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது.
முன்னாள் முதல்வர் சித்தராமையாவோ, நேற்று முன்தினமே டெல்லிக்குச் சென்றுவிட்டார். அங்குள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களிடம் ஆலோசனை நடத்தினார். அவரையே முதல்வராக, தலைமை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் அவர், செய்தியாளர் சந்திப்புக் கூட்டத்தில், "பொறுத்திருந்து பார்ப்போம். யார் முதல்வர் என்று எனக்குத் தெரியாது. அதுகுறித்த அறிவிப்பை கட்சித் தலைமை வெளியிடும். அப்போது தெரிந்துகொள்ளலாம்," என்று கூறியுள்ளார்.
முதல்வரை அறிவிப்பதில் சுணக்கம் ஏற்பட்டுள்ள இந்த நிலை, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பாதகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
டிகே சிவகுமாருக்கு ஒக்கலிக்கர் சமூகத்தினரிடம் பெரிய ஆதரவு இருக்கிறது. அந்த சமூகத்தினர் சிவகுமாரே முதல்வராக வரவேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். ஒக்கலிக்கர் சங்கம், டி.கே.சிவகுமாருக்கு முதலமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. அந்த சமூக மடாதிபதிகள் நிர்மலானந்தநாத சுவாமி, நஞ்சாவதூத சுவாமி மற்றும் லிங்காயத் மடாதிபதிகள் என 20 மடாதிபதிகள் பகிரங்கமாகவே டி.கே.சிவகுமாருக்கு முதல் அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் மேலிடத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
சித்தராமையாவுக்கோ, பெரிய அளவிலான சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டோரின் ஆதரவும் இருக்கிறது. அதனால் சித்தராமையா முதலமைச்சராக அறிவிக்கப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கட்சித்தலைமை இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தியபின் எப்படியும் விரைவில் முதல்வர் யார் என்பதை அறிவித்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், முதலமைச்சர் பதவியை முன்னாள் துணை முதலமைச்சர் பரமேஷ்வருக்குத் தரவேண்டும் என வலியுறுத்தி அவரது ஆதரவாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால், முதல்வர் பதவிக்கு மும்முனை போட்டி ஏற்பட்டு உள்ளது. முதலமைச்சர் பதவிக்கு இருவர் இடையே போட்டிக்கான சூழல் காணப்படும்போது, இப்போது அதில் பரமேஷ்வரும் இணைந்து உள்ளார். எனினும், கட்சி மேலிடம் என்ன முடிவு செய்கிறதோ அதற்கேற்பவே, இதில் தீர்வு காணப்படும் என கூறப்படுகிறது.

