குண்டூர்: தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் முன்னாள் ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடுவின் (படம்) வீட்டை கையகப்படுத்த ஆந்திர உள்துறை அமைச்சகம், சிஐடி-க்கு அனுமதி வழங்கி உள்ளது.
குண்டூர் மாவட்டம், உண்டவல்லி அருகே உள்ள கரகட்டா தெருவில் லிங்கமனேனி ரமேஷ் என்பவரின் வீட்டில் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு வாடகைக்கு குடி இருந்தார். பின்னர் அந்த வீட்டை அவர் வாங்கினார்.
இதுதொடர்பாக மங்களகிரி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஆள்ள ராமகிருஷ்ணா ரெட்டி, கடந்த ஆண்டு ஆந்திர மாநில சிஐடி காவல்துறையிடம் புகார் அளித்தார். அந்த புகாரில், ''ஆந்திர மாநிலத் தலைநகர வீட்டு வசதி திட்ட வாரியம் உள்ளிட்ட வளர்ச்சித் திட்டங்களின் மூலம் லிங்கமனேனி ரமேஷின் சொத்துகள் மதிப்பு உயர அப்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு உதவி செய்தார்,'' என்று குற்றம் சாட்டியிருந்தார்.
அதற்கு பிரதிபலனாக லிங்கமனேனி ரமேஷ் தனது வீட்டை சந்திரபாபு நாயுடுவுக்கு இலவசமாக வழங்கி உள்ளார் என்று ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக சிஐடி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் உண்டவல்லியில் உள்ள சந்திரபாபு நாயுடுவின் வீட்டை கையகப்படுத்த ஆந்திர உள்துறை அமைச்சகம் சிஐடி-க்கு அனுமதி வழங்கி உள்ளது.
இந்த நடவடிக்கையைக் கண்டித்து ஆந்திர அரசுக்கு தெலுங்கு தேசம் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

