வாஷிங்டன்: மும்பை பயங்கர வாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக அமெரிக்காவில் கைதான பயங்கரவாதியான தஹாவூர் ராணாவை இந்தியா வுக்கு நாடுகடத்த அமெரிக்க நீதிமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இது இந்தியாவுக்கு கிடைத்த வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.
கடந்த 2008ல் பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் மகாராஷ்டிரா மாநிலம், மும்பைக்குள் கடல்வழியாக நுழைந்து தாக்குதல் நடத்தினர்.
உலகையே உலுக்கிய இந்த சம்பவத்தில் 166 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இதில் ஆறு அமெரிக்கர்களும் அடங்குவர். அத்துடன், 300க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.
தாக்குதலில் முக்கிய குற்றவாளியான டேவிட் ஹெட்லி அமெரிக்காவில் கைது செய்யப்பட்டு 35 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார். இவரது நண்பரும் தாக்குதல் திட்டத்திற்கு உதவியவருமான கனடாவில் வசித்த பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த தொழிலதிபர் தஹாவூர் ராணா கடந்த 2020ல் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளியான தஹாவூர் ராணாவை இந்தியாவுக்கு நாடுகடத்த அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள அமெரிக்க மாவட்ட நீதிமன்றம் சம்மதம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நீதிபதி ஜாக்குலின் சூல்ஜியான் கூறுகையில், "62 வயதான ராணாவை நாடு கடத்த இந்தியா கோரியுள்ள காரணங்களில் முகாந்தரம் உள்ளதால் அவரை நாடுகடத்த சம்மதிக்கிறோம்," என்றார். மே 16ஆம் தேதி இதற்கான உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்தது.