புதுடெல்லி: மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 32வது நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, டெல்லியில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
தனது தந்தைக்கு உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்திய ராகுல் காந்தி, "அப்பா, நீங்கள் எப்போதும் ஒரு ஊக்கசக்தியாக, என் நினைவுகளில் நிறைந்திருக்கிறீர்கள்!" என ராஜீவ் காந்தியின் காணொளியைப் பகிர்ந்து, இந்தியில் டுவிட் செய்தார்.
முன்னதாக, ராஜீவ் காந்திநினைவிடத்தில் காங்கிரஸ் கட்சி யின் முன்னாள் தலைவரும் மனைவியுமான சோனியா காந்தி, அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.
1984ஆம் ஆண்டு தனது தாயாரும் அப்போதைய பிரதமருமான இந்திரா காந்தியின் படுகொலையைத் தொடர்ந்து ராஜீவ் காந்தி காங்கிரசின் பொறுப்பை ஏற்றார். அக்டோபர் 1984ல் அவர் பதவியேற்றபோது 40 வயதில் இந்தியாவின் இளைய பிரதமரானார். 1944ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20ஆம் தேதி பிறந்த ராஜீவ் காந்தி, 1991 மே 21ஆம் தேதி தேர்தல் பிரசாரத்துக்காக தமிழகத்தின் திருப்பெரும்புதூர் வந்த போது தற்கொலைப் படை தாக்குதலில் கொல்லப்பட்டார்.

