போர்ட் மோர்ஸ்பி: பாப்புவா நியூ கினியா நாட்டுக்குச் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அங்கு பேசப்பட்டு வரும் 'டோக் பிசின்' (Tok Pisin) மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலை வெளியிட்டார்.
பிரதமர் மோடி, ஜப்பான் பயணத்தை முடித்துக்கொண்டு, ஞாயிற்றுக்கிழமை இரவு பசிபிக் தீவு நாடான பாப்புவா நியூ கினியா சென்றடைந்தார்.
அந்நாட்டுப் பிரதமர் ஜேம்ஸ் மராப்பே, பிரதமர் மோடியின் காலைத்தொட்டு வணங்கி வரவேற்றார். அதன்பின்னர் நடந்த சந்திப்பில், 'டோக் பிசின்' மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்ட திருக்குறள் பதிப்பைப் பிரதமர் மோடி வெளியிட்டார்.
டுவிட்டரில் தமிழில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள பிரதமர் மோடி, "டோக் பிசின்' மொழியில் திருக்குறளை வெளியிட்டதில் எங்கள் இருவருக்கும் பெருமை. குறள் ஒரு தலைசிறந்த படைப்பு, இது பல்வேறு துறைகளில் மதிப்புமிக்க நுண்ணறிவுகளை வழங்குகிறது," எனக் குறிப்பிட் டுள்ளார்.
இரு நாடுகளுக்கு இடையே வர்த்தகம், முதலீடு, ஆரோக்கியம், திறன் மேம்பாடு, தகவல் தொழில்நுட்பம் உட்பட பல்வேறு துறைகளிலும் உறவைப் பலப் படுத்துவது குறித்து இரு தலை வர்களும் கலந்துரையாடினர்.
பாப்புவா நியூ கினியாவில் (பிஎன்ஜி) நடைபெற்ற உச்சி மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி பசிபிக் தீவுகளுக்கு ஆதர வளிப்பதாக உறுதியளித்தார்.
இந்தியா-பசிபிக் தீவுகள் ஒத்துழைப்பு மன்றத்தின் 14 தலைவர்களிடமும் பிரதமர் மோடி, இந்தியா சிறிய தீவு மாநிலங்களுக்கு நம்பகமான வளர்ச்சிப் பங்காளியாக இருக்கும் என்று கூறினார்.
தகவல் தொழில்நுட்பம், விண்வெளித் தொழில்நுட்பம், சுகாதாரப் பாதுகாப்பு, உணவுப் பாதுகாப்பு, காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய துறைகளில் எங்களது திறன்கள், அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம் என்று தெரிவித்தார்.
இதனிடையே, இந்தியப் பிரதமர் மோடிக்கு, ஃபிஜி நாட்டின் உயரிய விருதினை அந்நாட்டுப் பிரதமர் சிதிவேணி ரபுகா வழங்கி கௌரவித்தார்.

