மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தின் கெல்வே கிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் பிரணவ் சல்கர். ஒன்பதாம் வகுப்பில் படித்துவரும் பிரணவ், தன் அம்மா பல கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று தண்ணீர் தூக்கி வருவதைக் கண்டு வேதனைப்பட்டான்.
இதையடுத்து, தனது குடிசை வீட்டுக்கு அருகில் உள்ள இடத்தில் ஒரு கிணறு தோண்ட ஆரம்பித்தான். ஐந்து நாள்களில் பிரணவ் 20 அடி ஆழத்துக்கு தோண்டிய கிணற்றில் இருந்து தண்ணீர் பொங்கியது (படம்).
"மிகவும் மகிழ்ச்சி, இனி அம்மா தினமும் ஆற்றுக்குத் தண்ணீர் தேடிச் செல்லவேண்டிய தில்லை," என்று பிரணவ் கூறியதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல் கிணறு தோண்டும் பணியில் அயராது ஈடுபட்டதால், இந்தக் கிணறு தற்போது பிரணவ் குடும்பத்தின் பெருமையான சொத்தாக மாறியுள்ளது. பிரணவின் ஆசிரியரும் நண்பர்களும் கிணற்றை பார்வையிட்டுச் சென்றனர். கிராமத் தலைவர் பிரணவ் வீட்டுக்கு அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்க முன்வந்துள்ளார்.

