பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் கிடைத்த மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, அடுத்ததாக தேர்தல் நடைபெற உள்ள ஐந்து மாநிலங்களிலும் ஆட்சியைக் கைப்பற்றுவது குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாகத் தொடர் தோல்விகளைக் கண்டு வந்த காங்கிரஸ் கட்சிக்கு கர்நா டகா தேர்தல் வெற்றி மிகப்பெரும் ஊக்கத்தை அளிததுள்ளது.
இதையடுத்து, அடுத்த தேர்தல் நடைபெற உள்ள மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களிலும் ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸ் தயாராகி வருகிறது.
ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் ஏற்கெனவே காங்கிரஸ் ஆட்சி நடந்து வரும் நிலையில், அதை தக்கவைக்க வியூகம் வகுத்து வருகிறது.
இதேபோல் தெலுங்கானா, மத்தியப்பிரதேசம், மிசோரம் மாநிலங்களிலும் சூழ்நிலையை ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்தச் சூழலில் தேர்தல் நடைபெற உள்ள ஐந்து மாநிலங்களைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்களுடன் கார்கே தனித்தனியாக நாளை ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார்.
அப்போது உட்கட்சி பூசலைக் கையாளுதல், மக்கள் எதிர்பார்க்கும் வாக்குறுதிகள் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக காங்கிரஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவித்தன.

